மும்பை: கவாஸ்கருக்கு எதிராக நான் எதுவும் சொல்லவில்லை. நான் டுவென்டி-20 தொடரில் புதிய அணுகுமுறை தேவை என்று தான் கூறினேன். இருந்தாலும் அவரிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பியுள்ளேன் என பாலிவுட் நடிகரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் சீசன் 2 கிரிக்கெட் தொடர் வரும் 18ம் தேதி தென் ஆப்ரிக்காவில் துவங்குகிறது. இத்தொடரில் பங்கேற்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கடந்த ஆண்டு ஷாருக் வாங்கினார். இந்த அணியின் பயிற்சியாளராகவும், பொறுப்பாளராகவும் ஆஸ்திரேலியாவின் புக்கானன் இருக்கிறார்.
சமீபத்தில் புக்கானன் அணிக்கு கங்குலி மட்டும் கேப்டனல்ல. கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக புதுமை செய்யவிருக்கிறோம். இத்தொடரில் கங்குலியிடன் மேலும் மூன்று பேர் அணியின் கேப்டனாக இருப்பார்கள் என தெரிவித்தார்.
இதனால், கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு கவாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு பதில் சொல்லும் விதமாக ஷாருக் கான், டுவென்டி-20 தொடர் புதிது. இது புதுமையான ஆட்டம். இது மாறுபட்ட அணுகுமுறை தேவை. கவாஸ்கர் ஐபிஎல் அணி ஒன்றை வாங்கி தனது இஷ்டம் போல் செயல்படட்டும் என கூறியிருந்தார்.
இதையடுத்து ஷாருக்கானுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் ஷாருக் நேற்று மும்பையில் அளித்த பேட்டியில்,
பல கேப்டன்கள் சர்ச்சையால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். நாங்கள் சொன்ன திட்டம் கங்குலிக்கு புரிந்துவிட்டது. ஆனால் அதை எப்படி மக்களுக்கு விளக்குவது என்பது அவருக்கு தெரியவில்லை. ரசிகர்கள் பல கேப்டன்கள் என்றால் என்ன என்பது தெரியாமல் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இது வேறு ஒன்றுமில்லை. களத்தில் பீல்டிங் செய்யும் சில வீரர்கள் கேப்டனுக்கு சில முக்கிய குறிப்பு தந்து ஒரு கேப்டன் செயல்படுவார்கள். இது தான் பல கேப்டன் திட்டம்.
நான் கவாஸ்கருக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை. அப்போது அமெரிக்காவில் இருந்த கவாஸ்கரும் அதை தவறாக நினைத்திருக்கலாம் என எண்ணி அவருக்கு உடனே மன்னிப்பு கடிதம் ஒன்று எழுதியிருந்தேன்.
நான் சொன்ன விமர்சனங்கள் கிரிக்கெட்டை பற்றி தெரியாதவர்களுக்காக சொல்லப்பட்டது. அவர்களில் சிலர் இன்னும் எனக்கு அணியை நடத்துவது எப்படி என சொல்லி கொடுத்து வருகிறார்கள். கிரிக்கெட் தொடர்பாக கவாஸ்கர் என்ன ஆலோசனை தந்தாலும் அதை ஏற்று செயல்படுவோம்.
தற்போது ஐபிஎல் தொடருக்காக தென் ஆப்ரிக்கா செல்கிறேன். வரும் 28ம் தேதி வரை அங்கு இருப்பேன். பின்னர் இந்தியா வந்து தேர்தலில் ஓட்டுப்போட்டு விட்டு மீண்டும் தென் ஆப்ரிக்கா செல்வேன் என்றார் ஷாருக்.