
முன்னாள் தேர்வுக் குழு உறுப்பினரான அமர்நாத், கேப்டன் டோணியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசன்தான் தனது சுயநலத்துக்காக டோணியைக் காப்பாற்றி வருவதாக அவர் கூறி வருகிறார்.
மேலும் டோணியை நீக்குவது தொடர்பாக தேர்வுக் குழுக் கூட்டத்தி்ல பேசப்பட்டதாகவும், அனைவரும் சேர்ந்து நீக்க முடிவெடுத்ததாகவும், ஆனால் சீனிவாசன் தலையிட்டு அதை தடுத்து விட்டதாகவும் கூறியுள்ளார் அமர்நாத்.
இதுகுறித்து தேர்வுக் குழு முன்னாள் தலைவர் ஸ்ரீகாந்த் இன்று கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், ஆமாம், டோணி குறித்து நாங்கள் விவாதித்தோம்தான். ஆனால் ஒரு விவாதத்தின் முடிவில், ஒட்டு மொத்த அணியின் நலன் மற்றும் நாட்டின் நலன் கருதி ஒருமித்த முடிவு எட்டப்படும் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. அப்படிப்பட்ட ஒருமித்த முடிவுதான் டோணி குறித்தும் எடுக்கப்பட்டது.
கூட்டங்களில் பல விஷயங்கள் பேசப்படும். அத்தனையையும் எல்லோரிடமும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி பகிரங்கமாக சொல்ல வேண்டும் என்று யாரும் உரிமையாக கூறவும் முடியாது. தேர்வுக் குழுக் கூட்டத்தில் என்ன பேசப்படுகிறது என்பது ரகசியமானது. அதை பகிரங்கமாக விவாதிப்பது தவறான செயல் என்றார் ஸ்ரீகாந்த்.