மும்பை: மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தமிழகத்தின் பத்ரிநாத், முரளி விஜய், அபிஷேக் நய்யார் ஆகிய மூவரும், விசா சிக்கல் காரணமாக மேற்கு இந்தியத் தீவுகளுக்குக் கிளம்ப முடியாமல் மும்பையில் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான 4 ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் இந்தியா பங்கேற்கிறது. லண்டனில் நடந்த டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் அங்கிருந்து அப்படியே மேற்கு இந்தியத் தீவுக்குப் போய் விட்டனர்.
ஆனால் அணியில் சேர்க்கப்பட்ட, ஆனால் டுவென்டி 20 அணியில் இடம் பெறாமல் இருந்த பத்ரிநாத், அபிஷேக் நய்யார், முரளி விஜய் ஆகியோர் தற்போது விசா சிக்கல் காரணமாக இந்திய அணியுடன் சேர முடியாமல் தவிக்கின்றனர்.
லண்டன் வழியாக அவர்கள் மேற்கு இந்தியத் தீவுகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதில் இங்கிலாந்து தர வேண்டிய டிரான்சிட் விசா இன்னும் கிடைக்கவில்லையாம். இதனால்தான் அவர்கள் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
அவர்கள் மூவருக்கும் இன்று விசா கிடைத்துவிடும். அவர்கள் இன்று இரவு வெஸ்ட் இண்டீஸ் புறப்படுவார்கள். முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகள் நடக்கும் ஜமைக்காவுக்கு அவர்கள் நாளை மாலை சென்று சோருவார்கள் என்றார் அவர்.