ஸ்பாட் பிக்சிங்: பட்டுக்கு 30 மாதம், ஆசிபுக்கு 1 ஆண்டு, புரோக்கர் மசார் மஜீத்துக்கு 32 மாதம் சிறை

கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமீர் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட முகமது ஆமீர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். மற்ற 2 பேரின் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இறுதிக்கட்ட விசாரணை நடந்தது. இதில் சூதாட்ட புரோக்கர் மசார் மஜீத் மற்றும் 3 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும் ஆஜராகினர். விசாரணையில் கடந்த 2009ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டுவென்டி 20 உலகக் கோப்பை போட்டியின் போது சூதாட்ட புரோக்கர் மசார் மஜீதுக்கும், சல்மான் பட்டுக்கும் பழக்கம் ஏற்பட்டது தெரிய வந்தது.
மற்ற பாகிஸ்தான் வீரர்களையும் சூதாட்டத்தில் ஈடுபடுமாறு அறிவுரை கூற மசார் மஜீத் சல்மான் பட்டை கேட்டுக் கொண்டுள்ளார். எனவே, சூதாட்ட குற்றச்சாட்டுக்கு முக்கிய காரணம் சல்மான் பட் தான் என தெரிய வந்துள்ளது. இதற்காக 3 பாகிஸ்தான் வீரர்களும் தன்னிடம் பணம் வாங்கியதாக மசார் மஜீத் தெரிவித்தார்.
விசாரணை முடிவில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட சல்மான் பட், முகமது ஆசிப் மற்றும் குற்றத்தை ஒப்புக் கொண்ட முகமது ஆமீர், புரோக்கர் மசார் மஜீத் ஆகியோருக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது. தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட முகமது ஆமீருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விசாரணைக்கு பின் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட முகமது ஆசீப்-க்கு 1 ஆண்டு சிறையும், சல்மான் பட்-க்கு 2 ஆண்டு 6 மாதமும் அளிக்கப்பட்டுள்ளது. வீரர்களை சூதாட்டத்தில் ஈடுபடத் தூண்டிய புரோக்கர் மசார் மஜீத்துக்கு 2 ஆண்டு 8 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சல்மான் பட்டுக்கு 10 ஆண்டுகளும், முகமது ஆமீருக்கு 5 ஆண்டுகளும், முகமது ஆசிபுக்கு 7 ஆண்டுகளும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள ஐ.சி.சி. தடைவிதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:52 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications