பதக்க வேட்டை
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று பதக்க வேட்டையை தொடங்கி வைத்தார். இதன் பின்னர் ஒரு வார காலம் எந்தவித பதக்கமும் பெறாமல் ஏமாற்றம் மட்டுமே இந்தியாவுக்கு இருந்து வந்தது. அதன் பின்னர் தங்கம் வெல்வார் என இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப்பதக்கம் வென்றார்.
லாவ்லினா
இவரைத் தொடர்ந்து குத்துச்சண்டை போட்டியில் இளம் வீராங்கனை லாவ்லினா வெண்கலப்பதக்கம் வென்றார். சீனியர் வீராங்கனை மேரி கோம் கூட காலிறுதியில் வெளியேறிய நிலையில் தனது முதல் ஒலிம்பிக்கிலேயே பதக்கம் வென்று அசத்தினார். காலிறுதிப்போட்டி வரை படு வேகமாக இவர் கொடுத்த பஞ்ச்-கள் முன்னாள் வீரர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
இந்திய ஹாக்கி அணி
இதன் பின்னர் மல்யுத்தப்போட்டியில் ரவிக்குமார் தஹியா இறுதிப்போட்டி வரை சென்று வெள்ளிப்பதக்கமும், பஜ்ரங் புனியா வெண்கலப்பதக்கமும் வென்றனர். இதே போல இந்தியாவின் ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது.
தங்கம்
இந்நிலையில் இந்தியாவுக்கு இன்று டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கம் வென்று சாதனைப்படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா. இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா முதலிடத்தை பிடித்து, ஒலிம்பிக்கில் தடகளப்பிரிவில் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதுமட்டுமல்லாமல் தனிநபர் பிரிவில் தங்கம் வெல்லும் 2வது இந்தியர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
முடிவு நிகழ்ச்சி
இத்தகைய பெருமைகளை பெற்றுள்ள நீரஜ் சோப்ரா தான், ஒலிம்பிக் தொடரின் முடிவு விழா நிகழ்ச்சியில் இந்தியாவின் தேசியக்கொடியை ஏந்திச் செல்வார் என சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வருகிறது. ஆனால் தங்கப்பதக்கம் வென்ற போதும் அவரால் தேசியக்கொடியை ஏந்தி நடக்க முடியாது. ஒலிம்பிக்கின் இறுதி நிகழ்ச்சிகளில் இந்திய தேசியக்கொடியை ஏந்தப்போவது மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவே ஆகும்.
காரணம் என்ன?
டோக்கியோ ஒலிம்பிக்கில் தொடக்க நிகழ்ச்சியிலும், முடிவு நிகழ்ச்சியிலும், யார் இந்தியாவின் தேசியக்கொடியை ஏந்திச்செல்ல வேண்டும் என்பதை இந்திய ஒலிம்பிக் கமிட்டி ஏற்கனவே முடிவு செய்துவிட்டது. அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. அதன்படி சீனியர் வீரர் பஜ்ரங் புனியாவின் பெயர் தான் கொடியை ஏந்திச் செல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே தங்கம் வென்றாலும், புனியா தான் இறுதி நிகழ்ச்சிகளில் தேசியக்கொடியை ஏந்திச்செல்லவுள்ளார்.