‘நாடே பெருமைக் கொள்கிறது’.. ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுக்கு தேநீர் விருந்து.. கவுரவித்த ஜனாதிபதி!
டோக்கியோ: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து கொடுத்தார்.
உலகின் மிகப்பெரும் விளையாட்டு திருவிழாவாக பார்க்கப்படும் ஒலிம்பிக் தொடர் கடந்த ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெற்றது.
மொத்தம் 17 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் பல்வேறு பதக்கங்கள், வெற்றிகள், தோல்விகள் என விறுவிறுப்பாக நடைபெற்றது. உலக நாடுகள் பதக்கங்களை குவித்துள்ளது.
ஒலிம்பிக்கில் இந்தாண்டு இந்தியாவுக்கு முதல் சில நாட்கள் ஏமாற்றமாக இருந்தாலும், கடைசி சில நாட்கள் பதக்க வேட்டையாக இருந்துள்ளது. மொத்தமாக இந்தாண்டு இந்தியா 7 பதக்கங்களை டோக்கியோ ஒலிம்பிக்கில் பெற்றுள்ளது.

பதக்க வேட்டை
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று பதக்க வேட்டையை தொடங்கி வைத்தார். இதன் பின்னர் ஒரு வார காலம் எந்தவித பதக்கமும் பெறாமல் ஏமாற்றம் மட்டுமே இந்தியாவுக்கு இருந்து வந்தது. அதன் பின்னர் தங்கம் வெல்வார் என இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப்பதக்கம் வென்றார்.

லாவ்லினா
இவரைத் தொடர்ந்து குத்துச்சண்டை போட்டியில் இளம் வீராங்கனை லாவ்லினா வெண்கலப்பதக்கம் வென்றார். சீனியர் வீராங்கனை மேரி கோம் கூட காலிறுதியில் வெளியேறிய நிலையில் தனது முதல் ஒலிம்பிக்கிலேயே பதக்கம் வென்று அசத்தினார். காலிறுதிப்போட்டி வரை படு வேகமாக இவர் கொடுத்த பஞ்ச்-கள் முன்னாள் வீரர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

இந்திய ஹாக்கி அணி
இதன் பின்னர் மல்யுத்தப்போட்டியில் ரவிக்குமார் தஹியா இறுதிப்போட்டி வரை சென்று வெள்ளிப்பதக்கமும், பஜ்ரங் புனியா வெண்கலப்பதக்கமும் வென்றனர். இதே போல இந்தியாவின் ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது.

தங்கம்
இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் மட்டும் கிடைத்தாக குறையிருந்த சூழலில் நேற்று அதையும் தீர்த்து வைத்தார் நீரஜ் சோப்ரா. நேற்று நடைபெற்ற ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா முதலிடத்தை பிடித்து, ஒலிம்பிக்கில் தடகளப்பிரிவில் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தமாக 7 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 48வது இடத்தை பிடித்துள்ளது.

விருந்து
இந்நிலையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுவிட்டு நாடு திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து கொடுத்தார். அப்போது அனைத்து வீரர், வீராங்கனைகளும் மகிழ்ச்சியுடன் தங்களுக்கு வழங்கப்பட்ட கவுரங்களை ஏற்றுக்கொண்டனர்.

பெருமை
நிகழ்ச்சியின் போது பேசிய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் சாதனைகளால் நமது தேசம் பெருமை கொள்கிறது" என தெரிவித்தார். இந்த வீரர்கள் பிரதமர் மோடியையும் நேரில் சந்திக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications