கடைசி வரை பரபரப்பு.. திடீர் எழுச்சி கண்ட மணிகா பத்ரா.. டேபிள் டென்னிஸில் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
டோக்கியோ: ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் போட்டியின் 2வது ரவுண்டிலும் சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றுள்ளார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ரா.
முதல் நாளான நேற்று மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா முதல் சுற்றில் அசத்தல் வெற்றி பெற்றிருந்தார்.
கிரேட் பிரிட்டனின் டின்-டின் ஹோவை எதிர்கொண்ட அவர் முதல் நான்கு கேம்ஸ்களையும் 11-7, 11-6, 12-10, 11-9 என கைப்பற்றி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

தொடக்கத்தில் சரிவு
இந்நிலையில் டேபிள் டென்னிஸுக்கான 2வது சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் மணிகா பத்ரா உக்ரைனின் மார்கரி பெசாட்ஸ்காவை எதிர்கொண்டார். இந்த போட்டியின் தொடகத்தில் உக்ரைன் நாட்டு வீராங்கனையின் கையே ஓங்கி இருந்தது. இதனால் முதல் 2 கேம்ஸ்களிலும் 4 -11, 4 -11 என்ற புள்ளிக்கணக்கில் மணிகா பத்ரா பின்தங்கினார்.

கம்பேக்
ஆனால் சுதாரித்துக்கொண்ட மணிகா, 3வது கேம் முதல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 3வது மற்றும் 4வது கேம்களை 11 - 7, 12 - 10 என்ற புள்ளிக்கணக்கில் வென்று சமநிலை அடைந்தார். எனினும் 5வது கேமில் மீண்டும் உக்ரைன் நாட்டு வீராங்கனை 11 - 8 என்ற கணக்கில் கைப்பற்றினார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் யார் வெல்வார் என அதிக எதிர்பார்ப்பு உருவானது.

கடைசி கட்டம்
ஆனால் விடாப்பிடியாக இருந்த மணிகா பத்ரா 6வது மற்றும் 7வது கேமில் 11-5, 11 -7 என்ற கணக்கில் வென்று அசத்தினார். இதன் மூலம் 4 -11, 4 -11, 11 - 7, 12 - 10, 8 -11, 11-5, 11 -7 என்ற கேம் கணக்கில் உக்ரைன் நாட்டு வீராங்கனை மார்கரி பெசாட்ஸ்காவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஆடவர் ஒற்றை பிரிவு
இதே போல இன்று ஆடவருக்கான ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியின் 2வது சுற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் சத்தியன் ஞானசேகரன் - ஹாங்காங்கின் லாம் சூய் ஹாங்கை எதிர்கொண்டார். ஆனால் இதில் ஹாங் காங் வீரரின் கையே கடைசி வரை ஓங்கி இருந்ததால் 11 - 7, 7-11, 11-4, 5 - 11, 11-9, 12-10,11-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் சத்யன் ஞானசேகரனின் டோக்கியோ ஒலிம்பிக் பதக்க கனவு முடிவுக்கு வந்தது.


Click it and Unblock the Notifications