
54 போட்டியாளர்கள்
இந்தியா சார்பில் அதிகபட்சமாக இந்த முறை 54 வீரர், வீராங்கனைகள் வீரர்கள் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர். குறிப்பாக, தடகளம், வில்வித்தை, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்பட 9 வகையான விளையாட்டுகளில் போட்டியாளர்கள் களம் இறங்குகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தலைமையில் இந்திய அணி தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்கிறது. வழக்கத்துக்கு மாறாக இம்முறை கூடுதல் பதக்கங்களை வெல்ல இந்திய அணி முனைப்புடன் உள்ளது. இதற்காக தீவிரமாக பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

பரவும் வைரஸ்
டோக்கியோ ஒலிம்பிக் போல் பாரா ஒலிம்பிக்கிலும் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. ஏனெனில், கொரோனா தொற்று ஜப்பானில் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. மக்கள் இன்னும் கொரோனா கலக்கத்தில் தான் உள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியே எந்த நேரம் என்ன நடக்குமோ என்ற கலக்கத்தில் தான் நடைபெற்றது. அப்படியிருந்தும் சில நிர்வாகிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை நாம் காண முடிந்தது. இன்னமும் வைரஸ் பாதிப்பு அப்படியே நீடிப்பது, போட்டி அமைப்பாளர்களை கவலை அடையச் செய்துள்ளது. சமீபத்தில் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டி விட்டது. இதில் டோக்கியோவில் மட்டும் 5,074 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பாரா ஒலிம்பிக் தொடர்புடையவர்கள் இதுவரை 131 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது மற்றொரு அதிர்ச்சி செய்தி. இத்தனை கலவரங்களுக்கு இடையே தான் பாரா ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகின்றன.

கட்டாயம் மாஸ்க்
இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க வேண்டியது அவசியமாகி விட்டதாக போட்டி அமைப்பு குழுவின் தலைமை செயல் அதிகாரி டோஷிரோ முட்டோ தெரிவித்துள்ளார். பாரா ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள பணியாளர்களுக்கு 4 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இனி வீரர், வீராங்கனைகளை போல் அவர்களுக்கும் தினந்தோறும் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் கட்டுப்பாடு
ஜப்பானுக்கு வந்து 14 நாட்கள் குவாரண்டைன் நடைமுறையை முடித்த சில போட்டியாளர்கள் பொதுபோக்குவரத்தை பயன்படுத்தவும், வெளியில் சுதந்திரமாக செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த சலுகை இனி நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 'ஒலிம்பிக் இடங்களில் உள்ள உணவு வசதிகளை பயன்படுத்தும்படி போட்டியாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். மற்றவர்களிடம் பேசாமல் தனித்தனியாக அமர்ந்து சாப்பிட வேண்டும். இதே போல் போட்டி மற்றும் பயிற்சி தொடர்பாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுமே செல்லவேண்டும்' என்று போட்டி அமைப்பாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பு
இதற்கிடையே ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் பாரா ஒலிம்பிக் போட்டியை பார்க்க ஸ்டேடியங்களுக்கு 10 ஆயிரம் பள்ளி மாணவர்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக டோக்கியோ கவர்னர் யுரிகோ கோய்கே தெரிவித்துள்ளார். இந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பவீனா படேல் மற்றும் சோனல்பென் ஆகியோர் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த ஆவலுடன் இருக்கிறார்கள். அவர்கள், மகளிர் பாரா டேபிள் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவிலும், மகளிர் இரட்டையர் பிரிவிலும் இணைந்து போட்டியிட உள்ளனர்.

பதக்கம்
போட்டியின் துவக்க நாளான ஆகஸ்ட் 25-ம் தேதி, டோக்கியோவில் நடைபெறும் தகுதிச் சுற்றுகளில் அவர்கள் இருவரும் கலந்து கொள்ள உள்ளனர். தகுதிச்சுற்றுகள் ஆகஸ்ட் 25, 26 மற்றும் 27-ஆம் தேதிகளிலும், காலிறுதி மற்றும் இறுதிப்போட்டி முறையே ஆகஸ்ட் 28 மற்றும் 29 தேதிகளிலும் நடைபெறும். அகமதாபாத்தில் உள்ள கண் பார்வையற்றோர் மக்கள் சங்கத்தில் லாலன் தோஷியிடம் இருவரும் தீவிர பயிற்சி பெற்றுள்ளனர். உலக தர வரிசையில், பவினா 18-ஆவது இடத்திலும், சோனல்பென் 19-ஆம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இருவரும் சர்தார் பட்டேல் மற்றும் ஏகலைவ விருதுகளைப் பெற்றிருப்பதுடன், ஆசியப் போட்டிகளிலும் பதக்கம் வென்றுள்ளனர். சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதற்கு இந்திய அரசின் உதவிகளையும் பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications











