For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Paralympics: கடைசி நேர சிக்கல்.. தேசிய கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பை இழந்த மாரியப்பன் - ஏன்?

டோக்கியோ: பாரா ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, மூவர்ண கோடியை ஏந்திச் செல்வதாக இருந்த நிலையில், கொரோனா அந்த பொன்னான வாய்ப்பை தட்டிப் பறித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று (ஆக.24) தொடங்குகிறது. இது 16வது பாரா ஒலிம்பிக் போட்டித் தொடராகும்.

இன்று தொடங்கும் இத்தொடர் செப்டம்பர் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஏறக்குறைய 160 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

 அதிக போட்டியாளர்கள்

அதிக போட்டியாளர்கள்

இந்தியா சார்பில் அதிகபட்சமாக இந்த முறை 54 வீரர், வீராங்கனைகள் வீரர்கள் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர். குறிப்பாக, தடகளம், வில்வித்தை, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்பட 9 வகையான விளையாட்டுகளில் போட்டியாளர்கள் களம் இறங்குகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தலைமையில் இந்திய அணி தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்கிறது. வழக்கத்துக்கு மாறாக இம்முறை கூடுதல் பதக்கங்களை வெல்ல இந்திய அணி முனைப்புடன் உள்ளது. இதற்காக தீவிரமாக பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக் போல் பாரா ஒலிம்பிக்கிலும் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. ஏனெனில், கொரோனா தொற்று ஜப்பானில் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. மக்கள் இன்னும் கொரோனா கலக்கத்தில் தான் உள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியே எந்த நேரம் என்ன நடக்குமோ என்ற கலக்கத்தில் தான் நடைபெற்றது. அப்படியிருந்தும் சில நிர்வாகிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை நாம் காண முடிந்தது. இன்னமும் வைரஸ் பாதிப்பு அப்படியே நீடிப்பது, போட்டி அமைப்பாளர்களை கவலை அடையச் செய்துள்ளது. சமீபத்தில் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டி விட்டது. இதில் டோக்கியோவில் மட்டும் 5,074 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பாரா ஒலிம்பிக் தொடர்புடையவர்கள் இதுவரை 131 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது மற்றொரு அதிர்ச்சி செய்தி. இத்தனை கலவரங்களுக்கு இடையே தான் பாரா ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகின்றன.

 சலுகை கிடையாது

சலுகை கிடையாது

இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க வேண்டியது அவசியமாகி விட்டதாக போட்டி அமைப்பு குழுவின் தலைமை செயல் அதிகாரி டோஷிரோ முட்டோ தெரிவித்துள்ளார். பாரா ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள பணியாளர்களுக்கு 4 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இனி வீரர், வீராங்கனைகளை போல் அவர்களுக்கும் தினந்தோறும் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானுக்கு வந்து 14 நாட்கள் குவாரண்டைன் நடைமுறையை முடித்த சில போட்டியாளர்கள் பொதுபோக்குவரத்தை பயன்படுத்தவும், வெளியில் சுதந்திரமாக செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த சலுகை இனி நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 'ஒலிம்பிக் இடங்களில் உள்ள உணவு வசதிகளை பயன்படுத்தும்படி போட்டியாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். மற்றவர்களிடம் பேசாமல் தனித்தனியாக அமர்ந்து சாப்பிட வேண்டும். இதே போல் போட்டி மற்றும் பயிற்சி தொடர்பாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுமே செல்லவேண்டும்' என்று போட்டி அமைப்பாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கிடையே ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் பாரா ஒலிம்பிக் போட்டியை பார்க்க ஸ்டேடியங்களுக்கு 10 ஆயிரம் பள்ளி மாணவர்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக டோக்கியோ கவர்னர் யுரிகோ கோய்கே தெரிவித்துள்ளார்.

 பொன்னான வாய்ப்பு

பொன்னான வாய்ப்பு

இந்த பாரா ஒலிம்பிக்சின் தொடக்க விழாவில், கடந்தமுறை தங்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, தேசிய கொடியான மூவர்ண கோடியை ஏந்திச் செல்வதாக இருந்தது. இந்தநிலையில், மாரியப்பன் தங்கவேலுவிற்கு கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணியுடன் தொடர்பு (contact) ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இதன்பிறகு பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறும் கிராமத்தில் நடைபெற்ற கொரோனா பரிசோதனையில், மாரியப்பன் தங்கவேலுவிற்கு கரோனா இல்லை என தெரியவந்தாலும், அவரை ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்கேற்க செய்ய வேண்டாம் என போட்டியை நடத்தும் குழு அறிவுறுத்தியுள்ளது. இதனால் பாரா ஒலிம்பிக்சின் தொடக்க விழாவில் இந்தியாவின் மூவர்ண கோடியை ஏந்திச் செல்லும் கவுரவத்தை மாரியப்பன் தங்கவேலு இழந்துள்ளார். அவருக்குப் பதிலாக தேக் சந்த் என்பவர் இந்திய தேசியக் கோடியை ஏந்திச் செல்லவுள்ளார். மாரியப்பன் கடந்த ரியோ ஒலிம்பிக் தொடரில் தங்கம் வென்ற நிலையில், அவருக்கு இம்முறை தேசிய கொடியை ஏந்திச் செல்லும் கெளரவம் கிடைத்தது. ஆனால், இந்த பொன்னான வாய்ப்பு இப்போது கொரோனாவால் பாழாய் போனது.

 சிக்கலில் இந்திய அணி

சிக்கலில் இந்திய அணி

மாரியப்பனைத் தவிர, ஜப்பான் சுகாதார அதிகாரிகளால் 'நெருங்கிய தொடர்புகள்' என லாவண்யா ஸ்வஸ்திக் சிர்சிகர், சோம்பீர் சிங், வினோத் குமார், அபிஷேக் சஞ்சீவ் வாக் மற்றும் முகமது டேனிஷ் ஆகிய விளையாட்டு வீரர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுகுறித்து, "டோக்யோ பாராலிம்பிக் கோவிட் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இப்போது எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது, எங்கள் பாரா விளையாட்டு வீரர்கள் 6 பேர் டோக்கியோவிற்கு பயணம் செய்யும் போது நெருங்கிய தொடர்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என்று இந்தியா பாரா ஒலிம்பிக் கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, August 24, 2021, 20:28 [IST]
Other articles published on Aug 24, 2021
English summary
Paralympics India flag-bearer Mariyappan - பாரா ஒலிம்பிக்ஸ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+