சென்னை: காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷூக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகின்ற காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டுப் போட்டியில், பளு தூக்கும் பிரிவில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துள்ளார். அதுமட்டுமின்றி பளு தூக்கும் போட்டியில் புதிய சாதனைச் சரித்திரமும் படைத்துள்ளார்.
தான் பங்கேற்ற முதல் சர்வதேச போட்டியிலேயே தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்கு மதிப்பைப் பெற்றுத் தந்துள்ள விளையாட்டு வீரர் சதீசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் மேன்மேலும் வெற்றிகளைக் குவித்திட, சாதனைகள் தொடர்ந்திட மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் வாழ்த்துகிறேன்'' எனக் கூறியுள்ளார்.