ஜெர்மனியில் சிக்கிய ஆனந்த்
கடந்த பிப்ரவரியில் ஜெர்மனியில் நடைபெற்ற பண்டஸ்லிகா செஸ் சீசனில் பங்கேற்பதற்காக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஜெர்மனி சென்றிருந்தார். கொரோனா வைரஸ் காரணமாக அந்த சீசன் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் அமல்படுத்தப்பட்டிருந்த நாடுதழுவிய ஊரடங்கு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கேயே தன்னை அவர் தனிமைப் படுத்திக் கெண்டார்.
தனிமைப்படுத்தப்பட்ட ஆனந்த்
இந்நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அவர் நாடு திரும்பினார். பெங்களுருவில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், இங்கு மீண்டும் ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் தனது மனைவி அருணா மற்றும் மகன் அகிலுடன் அவர் இணைந்துள்ளார்.
மகனுடன் அதிக நேரங்கள்
இந்த தருணம் மிகவும் நெகிழ்ச்சியாக அமைந்துள்ளதாக விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார். 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் குடும்பத்தினருடன் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியாகவும் ரிலாஸ்டாக உள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். இதையடுத்து தன்னுடைய 9 வயது மகனுடன் அவர் அதிகமான நேரங்களை இன்றைய தினம் செலவழித்து வருகிறார்.
அருணா ஆனந்த் நன்றி
இதனிடையே இந்த நெருக்கடி சூழலை கடந்துவர உதவி செய்த ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரகம், மத்திய அரசு உள்ளிட்டவற்றிற்கு ஆனந்த்தின் மனைவி அருணா நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். இந்த தருணத்தை பிரவுனீஸ், பாஸ்தா, கார்லிக் பிரட் போன்ற பிரத்யேக உணவுகளுடன் தாங்கள் கொண்டாட உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.