
ஜெர்மனி
ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் ஆன விஸ்வநாதன் ஆனந்த் தொடர்ந்து செஸ் தொடர்களில் பங்கேற்று வருகிறார். கடந்த மாதம் செஸ் தொடரில் பங்கேற்க அவர் ஜெர்மனி சென்றார். அது தான் அவருக்கு சிக்கலை உண்டாக்கி உள்ளது.

பண்டேஸ்லிகா செஸ் தொடர்
பண்டேஸ்லிகா செஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்றது. அந்த தொடரில் பங்கேற்க விஸ்வநாதன் ஆனந்த் ஜெர்மனி சென்றார். அங்கே இருந்து அவர் மார்ச் 16 அன்று விமானம் மூலம் கிளம்பி இருக்க வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக அவர் அங்கேயே சிக்கிக் கொண்டார்.

கொரோனா வைரஸ் தாக்கம்
கடந்த ஜனவரி மாதம் சீனாவில் வேகமாக பரவிய கொரோனா வைரஸ், அதன் பின் உலகம் முழுவதும் பரவியது. பிப்ரவரி மாதத்தில் ஐரோப்பிய தேசங்களுக்கு அந்த வைரஸ் பரவியது. அந்த நேரத்தில் தான் விஸ்வநாதன் ஆனந்த் அங்கே இருந்துள்ளார்.

விசா கட்டுப்பாடுகள்
அதன் பின் மார்ச் 16 அவர் ஜெர்மனியில் இருந்து கிளம்ப வேண்டிய நேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால், யாருக்கும் ஏப்ரல் 15 வரை விசா வழங்கப்பட மாட்டாது என கூறப்பட்டது.

முன்னெச்சரிக்கையாக இருக்கிறோம்
அதனால், விஸ்வநாதன் ஆனந்த் ஜெர்மனியில் சிக்கிக் கொண்டார். அது குறித்து அவரது மனைவி அருணா பேசி உள்ளார். "நாங்கள் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை பின்பற்றி வருகிறோம். எங்களால் முடிந்த அளவு நாங்கள் தினசரி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.

பாதி லாக்டவுன் தான்
"ஆனந்த் ஜெர்மனியில் வீட்டிலேயே பயிற்சி எடுத்து வருகிறார். இது பாதி லாக்டவுன் தான். எனவே, அவர் தன் இடத்தை விட்டு வெளியேற முடியவில்லை. நாங்கள் இரண்டு நாடுகளின் பயண அறிவுரைகளை உற்று நோக்கி, எப்போது மீண்டும் பயணம் செய்யலாம் என கவனித்து வருகிறோம்" என்றார்.

தனிமையில் இருக்கிறார்
"தற்போது விஸ்வநாதன் ஆனந்த் ஒரு அபார்ட்மெண்டில் முழுமையாக தனிமையில் இருக்கிறார். நாங்கள் பாதுகாப்பான வாய்ப்புகளை கவனித்து வருகிறோம். இரண்டு நாடுகளின் ட்விட்டர் கணக்குகளில் பதிவிடப்படும் தகவல்களை பின்பற்றி வருகிறோம்." என்றார் அருணா.


Click it and Unblock the Notifications











