வியட்நாம் போரில் ஈடுபட மறுத்து பாக்ஸிங்கில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்ட முகம்மது அலி!
சான்பிரான்சிஸ்கோ: முகம்மது அலி "பன்ச்"சுக்கு மட்டும் பெயர் போனவர் இல்லை. மனிதாபிமானத்திற்கும், மனித நேயத்திற்கும் பெயர் போனவரும் கூட. கருப்பர் இனத்தவரின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர். வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்து வியட்நாமியர்களை கொன்று குவித்த போது அந்தப் போரில் ஈடுபட மறுத்தவர் முகம்மது அலி. இதற்காக அவர் மூன்றரை காலம் குத்துச் சண்டையில் பங்கேற்க அமெரிக்க அரசு தடை விதித்தது. ஆனாலும் அசரவில்லை அவர்.
60களில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சிவில் உரிமைப் போராட்டங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் அலி. கருப்பர் இனத்தவர்களுக்கு எதிரான அநீதிகளை எதிர்த்துக் குரல் கொடுத்தார். தனது ஆரம்ப கால குத்துச் சண்டை வாழ்க்கையின்போது கருப்பர்களுக்காக பல தியாகங்களைச் செய்தவரும் கூட.
கேஸியஸ் கிளே என்ற இயற்பெயரைக் கொண்ட முகம்மது அலி பின்னர் இஸ்லாமுக்கு மதம் மாறி தனது பெயரை மாற்றிக் கொண்டவர்.

64ல் பெற்ற பட்டம் பறிப்பு
1964ம் ஆண்டு அப்போது பெரும் ஜாம்பவானாக திகழ்ந்தவரான சோனி லிஸ்டனை வீழ்த்தி ஹெவிவெயிட் பட்டத்தைத் தட்டிச் சென்றார் அலி. ஆனால் 1967ல் அவரது பட்டத்தை அமெரிக்க அரசு பறித்தது.

ராணுவத்தில் சேர மறுத்ததால்
வியட்நாம் போரில் ஈடுபடுமாறும், ராணுவத்தில் சேருமாறும் முகம்மது அலிக்கு உத்தரவிடப்பட்டபோது அதை அவர் ஏற்க மறுத்து விட்டார். நிராகரித்து விட்டார். இதனால் அவரது ஹெவிவெயிட் பட்டம் பறிக்கப்பட்டது.

3 ஆண்டு தடை
மேலும் அவர் 1970ம் ஆண்டு வரை அவர் குத்துச் சண்டைப் போட்டிகளில் கலந்து கொள்ளவும் அமெரிக்க அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து கோர்ட்டுக்குப் போனார் அலி. 1971ல் அவரது வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அலிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. அலி, வியட்நாம் போரில் கலந்து கொள்ள மறுத்ததில் தவறில்லை என்றும் தீர்ப்பு தெரிவித்தது.

மேலும் வலுவான வீரராக வந்தார்
இதுகுறித்து பிரபல குத்துச் சண்டை புரமோட்டர் பாப் அரும் கூறுகையில், மூன்றரை வருடம் அவர் குத்துச் சண்டைப் போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை. அவர் இனிமேல் எங்கே எழப் போகிறார் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் மீண்டு வந்த பிறகுதான் அலி தனது முழு விஸ்வரூபத்தைக் காட்டினார்.

மாபெரும் மனிதர்
முகம்மது அலி நமது காலத்தில் கிடைத்த மிகப் பெரிய மனிதர். மிகச் சிறந்த வீரர், மிகச் சிறந்த விளையாட்டுக்காரர். அருமையான பேச்சாளர், உரிமைகளுக்காகப் போராடியவர். சரி என்று பட்டால் அதை சரி என்று மட்டுமே சொல்லக் கூடியவர் என்றார் அரும்.


Click it and Unblock the Notifications