மீண்டும் இந்தியாவுக்கு வரும் ஆசிய விளையாட்டுப் போட்டி? மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!
டெல்லி: விளையாட்டு உலகில் உலகளாவிய சக்தியாக உருவெடுக்க இந்தியா அடுத்தடுத்த அதிரடி அடிகளை எடுத்து வைத்து வருகிறது. 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், தற்போது 2038-ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளையும் இந்தியாவில் நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ விருப்பத்தை இந்தியா தெரிவித்துள்ளது. சுமார் 56 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விளையாட்டுத் தொடர் மீண்டும் இந்திய மண்ணில் நடைபெறுமா என்ற பலத்த எதிர்பார்ப்பு விளையாட்டு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்திய ஒலிம்பிக் சங்கம், 2038 ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான தனது விருப்ப மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இது குறித்த முதற்கட்ட ஆலோசனைகள் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன. கடைசியாக இந்தியா 1982-ம் ஆண்டு புதுடெல்லியில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது. அதற்கு முன்னதாக 1951-ம் ஆண்டு முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டியும் இந்தியாவில் தான் நடைபெற்றது. தற்போது 2038-ம் ஆண்டு போட்டிகளுக்கான வாய்ப்பு கிடைத்தால், அது இந்திய விளையாட்டுத் துறைக்கு ஒரு மைல்கல்லாக அமையும்.

இந்தப் போட்டிகளை நடத்துவதற்கான முதன்மை நகரமாக குஜராத்தின் அகமதாபாத் உருவெடுத்துள்ளது. ஏற்கனவே 2030-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை அகமதாபாத் உறுதி செய்துள்ளது. அதேபோல 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளையும் அங்கேயே நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அகமதாபாத்தை சர்வதேச விளையாட்டு மையமாக மாற்ற மத்திய அரசு மிகப்பெரிய உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவை விளையாட்டுத் துறையில் ஒரு வல்லரசாக மாற்ற 'கேலோ இந்தியா' போன்ற பல திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக கூறி இருக்கிறார். 2036 ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏலத்தை வெற்றிகரமாக முடிக்க இந்தியா முழு பலத்துடன் தயாராகி வருவதாக அவர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இத்தகைய மெகா விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதன் மூலம் இந்திய வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த அனுபவம் கிடைப்பதுடன், நாட்டின் பொருளாதாரமும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2038 ஆசியப் போட்டிகளுக்கான போட்டியில் இந்தியாவுடன் தென்கொரியா மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளும் களத்தில் உள்ளன. ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் இது குறித்த இறுதி முடிவை 2028-ம் ஆண்டிற்குப் பிறகு அறிவிக்கும். முன்னதாக 2026-ல் ஜப்பான், 2030-ல் ரியாத் மற்றும் 2034-ல் தோஹா ஆகிய நகரங்களில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. 10,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த மாபெரும் தொடரை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது, சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு உயர்ந்துள்ளதையே காட்டுகிறது.


Click it and Unblock the Notifications