முடங்கி இருக்கும் வீரர்கள்
கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தற்போது உலகம் முழுவதும் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். கொரோனா வைரஸ் பரவி வருவதால் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிரிக்கெட் வீரர்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சாஹல் முன்னோடி
இந்த நிலையில் அனைவரும் வேறு வழியின்றி சமூக வலைதளங்களில் மூழ்கி உள்ளனர். இவர்களில் இந்திய அணி சுழற் பந்துவீச்சாளர் சாஹல் கொஞ்சம் முன்னோடி. மற்ற வீரர்கள் எல்லாம் பட்டும் படாமல் சமூக வலைதளங்களில் செயல்பட்டு வந்த போது அவர் மட்டும் அதே கதியாக இருந்தவர்.
மொக்கை வீடியோ
இப்போது லாக்டவுன் நேரம். வீட்டிலேயே இருக்க வேண்டும். சாஹல் பற்றி சொல்லவா வேண்டும். டிக்டாக் சமூக வலைதளத்தில் காமெடி வீடியோ போடுகிறேன் என செம மொக்கை போட்டு வருகிறார். அதில் பலவற்றை எந்த வகையிலும் ரசித்துப் பார்க்க முடியவில்லை.
விராட் கோலி என்ன சொன்னார்?
கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றோர் கூட சமீபத்தில் அவரை குறிப்பிட்டு கலாய்த்து இருந்தனர். கோலி அவரை ஒரு முழு கோமாளி என கூறி இருந்தார். இவர் சர்வதேச கிரிக்கெட் ஆடுகிறார் என்பதை நம்பவே முடியவில்லை என கூறி உள்ளார்.
முழு கோமாளி
ஏபி டிவில்லியர்ஸ் உடனான சந்திப்பில் கோலி இவ்வாறு கூறினார். "இவர் சர்வதேச கிரிக்கெட் ஆடுகிறார், இவருக்கு 29 வயது ஆகிறது என்பதை உங்களால் நம்பவே முடியாது. அவரது வீடியோக்களை பாருங்கள். அவர் ஒரு முழு கோமாளி" என கூறி உள்ளார்.
கிறிஸ் கெயில் கிண்டல்
இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் சாஹலை செமயாக கிண்டல் செய்துள்ளார். அவரது டிக்டாக் கணக்கை தடை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரி உள்ளார். அவரை இனி தன் வாழ்வில் பார்க்கவே விரும்பவில்லை எனவும் கூறி உள்ளார்.
டிக்டாக் தடை
"டிக்டாக்கிடம் உண்மையாகவே உன்னை தடை செய்யுமாறு கூறப் போகிறேன். சமூக வலைதளங்களில் நீ ரொம்ப தொல்லை தருகிறாய். நீ இப்போதே சமூக வலைதளங்களில் இருந்து வெளியேற வேண்டும்" என கோபப்படுவது போல கலாய்த்துள்ளார் கெயில்.
உன்னை சந்திக்க விரும்பவில்லை
மேலும், "நாங்கள் சாஹலால் ரொம்ப சோர்ந்து போய் விட்டோம். நான் என் வாழ்வில் உன்னை மீண்டும் சந்திக்க விரும்பவில்லை. நான் உன்னை தடை செய்யப் போகிறேன்" எனவும் கூறி இருக்கிறார் கிறிஸ் கெயில். இன்னும் எத்தனை கிரிக்கெட் வீரர்கள் சாஹல் வீடியோவால் பாதிக்கப்பட போகிறார்களோ?