சிட்னி: 2026 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் வீரர், வீராங்கனைகளின் தனியுரிமை அத்துமீறப்படுவதாகப் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. உலகின் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக், "நாங்கள் என்ன மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகளா? எல்லா இடங்களிலும் கேமரா வைத்து கண்காணிப்பது ஏன்?" என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்த ஸ்வியாடெக், செய்தியாளர்கள் சந்திப்பில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அப்போது அவர், "நாங்கள் டென்னிஸ் வீரர்கள் தான். ஆடுகளத்திலும், செய்தியாளர்கள் சந்திப்பிலும் எங்களை படம் எடுப்பது உங்கள் வேலை. ஆனால், நாங்கள் உடை மாற்றும் இடத்திலும், தனிப்பட்ட முறையில் இருக்கும் இடங்களிலும் கேமராக்கள் எங்களை நோக்கியே இருப்பது வேதனை அளிக்கிறது.

நாங்கள் என்ன ஜூவில் இருக்கும் விலங்குகளா? விலங்குகள் மலம் கழிப்பதை கூட வேடிக்கை பார்ப்பது போல, எங்களின் ஒவ்வொரு அசைவையும் படம் பிடிக்கிறார்கள். இது சற்று மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம், ஆனால் எங்களுக்கு என்று கொஞ்சம் தனியுரிமை வேண்டும்" என்று மிகவும் ஆவேசமாகப் பேசினார்.
இந்தச் சர்ச்சை எழுவதற்கு அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் தொடர்பான ஒரு வீடியோ முக்கிய காரணமாக அமைந்தது. காலிறுதியில் தோல்வியடைந்த விரக்தியில், ஆடுகளத்திற்கு வெளியே யாருக்கும் தெரியாமல் மறைவான ஒரு இடத்தில் தனது ராக்கெட்டை கோகோ காஃப் உடைத்தார்.
ஆனால், அந்த இடத்திலும் வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமராக்கள் அதை பதிவு செய்து இணையத்தில் வைரலாக்கின. இது குறித்துப் பேசிய கோகோ காஃப், "நான் யாருக்கும் தெரியாமல் தான் கோபத்தை வெளிப்படுத்த நினைத்தேன். ஆனால் உடை மாற்றும் அறையைத் தவிர வேறு எங்குமே இங்குத் தனியுரிமை இல்லை" என்று வேதனை தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய உலகின் நம்பர் 1 வீரர் நோவக் ஜோகோவிச், "கோகோ காஃப் நிலையை நினைத்து வருந்துகிறேன். தோல்வியின் விரக்தியை வெளிப்படுத்தக் கூட வீரர்களுக்கு ஒரு தனி இடம் இல்லாதது சோகமானது. ஆனால், இன்றைய உலகம் 'கண்டெண்ட்' (Content) உலகமாக மாறிவிட்டது. எல்லாம் வீடியோவாக வேண்டும் என்று நினைக்கிறார்கள். அடுத்து நாங்கள் குளிக்கும் இடத்தில் கூட கேமரா வைப்பார்கள் என்று நினைக்கிறேன்" என்று கிண்டலாகவும், வேதனையுடனும் குறிப்பிட்டார்.
கோகோ காஃபிற்கு ஆதரவாக முன்னாள் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ் குரல் கொடுத்துள்ளார். "தோல்வியை வெறுப்பதில் தவறில்லை. ராக்கெட்டை எப்படி உடைக்க வேண்டும் என்று நான் வேண்டுமென்றால் சொல்லித்தரவா?" என்று ஜாலியாகப் பதிவிட்டு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். வீராங்கனைகளின் இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மகளிர் டென்னிஸ் சங்கம் (WTA) வீரர்களின் தனியுரிமை காக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் உறுதி அளித்துள்ளது.
முன்னதாக 2026 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பல போட்டிகள் கடும் வெயிலால் பாதிக்கப்பட்டன. வீரர்கள் கடும் வெயிலின் தாக்கத்தால் போட்டிகளை முழுமையாக விளையாட முடியாத சூழல் நிலவியது. இதை அடுத்து வீராங்கனைகளின் தனியுரிமை பாதிப்பு சர்ச்சை எழுந்துள்ளது.