டெல்லி: காமன்வெல்த் போட்டி டேபிள் டென்னிஸ் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியா வென்றது.
காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடக்கிறது. முதல் நாளில் மகளிர் பளுதூக்குதலில் 48 கிலோ எடைப் பிரிவில் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றார். ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவில் குருராஜா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்த நிலையில், டேபிள் டென்னிஸ் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் இந்திய அணிகள் முதல் வெற்றியைப் பெற்றன.
ஆடவர் பிரிவில் இந்தியா தனது முதல் சுற்று ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் டிரினிடாட் அண்ட் டொபாகோ அணியை வென்றது. ஒற்றையர் பிரிவில் முதலில் ஆடிய அமல்ராஜ் ஆண்டனி, 11-5, 3-11, 11-2, 14-12 என்ற செட்களில் டெக்ஸ்டர் செயின்ட் லூயிசை வென்றார்.
மற்றொரு ஒற்றையரில் சத்யன் ஞானசேகரன் 11-5, 11-5, 11-4 என்ற செட்டில் ஆரான் வில்சனை சுலபமாக வென்றார். பின்னர் நடந்த இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் ஹர்மீத் தேசாய், சத்யன் ஞானசேகரன் ஜோடி 11-9, 11-4, 11-4 என்ற செட்களில் சுலபமாக வென்றது. இதன் மூலம் 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
முன்னதாக,மகளிர் பிரிவில் 3-0 என இலங்கையை வீழ்த்தினர். முதல் ஆட்டத்தில் மனிகா பத்ரா 11-3, 11-5, 11-3 என்ற செட்டில் எரான்டி வருசவிதானாவை வென்றார். அதற்கடுத்து நடந்த மற்றொரு ஒற்றையரில் சுதிர்தா முகர்ஜி 11-5, 11-8, 11-4 என, இஷாரா மனிகுபடுவை வென்றார்.
அதற்கடுத்து இரட்டையரில் களமிறங்கிய சுதிர்தா முகர்ஜி, பூஜா சகஸ்ரபூதே ஜோடி 11-6, 11-7, 11-3 என சுலபமாக வென்றது. இதன் மூலம் 3-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி வென்றது.