பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை 21 வயதான போலாந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் வென்றார்.
இறுதிப் போட்டியில் 18 வயதான அமெரிக்க வீராங்கனை கோகோவை அவர் எதிர்கொண்டார். இந்த வெற்றியின் மூலம், சர்வதேச டென்னிஸ் போட்டியில் தொடர்ந்து 36 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
ஆஷ்லி பார்டி ஓய்வு பெற்றதன் மூலம், இகா ஸ்வியாடெக் நம்பர் 1 இடத்தை பிடித்தார். தோஹா, இந்தியன் வெல்ஸ், மியாமி, ஸ்டட்கர்ட், ரோம் மாஸ்டர்ஸ் ஆகிய தொடர்களில் ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்- இறுதி போட்டியில் மாணவனை எதிர்கொள்ளும் ஆசிரியர் நடால்.. 4 ஆண்டில் அதிசயம்
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தொடக்கம் முதலே அதிரடியை காட்டிய ஸ்வியாடெக் 6க்கு1, 6க்கு3 என்ற செட் கணக்கில் அமெரிக்கா வீராங்கனை கோகோவை வீழ்த்தினார். இதன் மூலம் ஸ்வியாடெக் 2வது முறையாக பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றார். தோல்வியை தழுவிய 18 வயது வீராங்கனை கோகோ கண்ணீர் விட்டு அழ தொடங்கினார்.
பின்னர் முகத்தை டவலால் மூடிக் கொண்டார். வெற்றி குறித்து பேசிய ஸ்வியாடெக் இறுதிப் போட்டியை மற்றொரு சாதாரண போட்டியை போல் தான் நினைத்து கொண்டு விளையாடினேன். நிச்சயம், இறுதிப் போட்டியில் விளையாடும் போது பதற்றம் இருக்கும். அதே போல் எதிரே விளையாடும் வீராங்கனைக்கும் பதற்றம் அச்சம் இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தனது வெற்றியை ரஷ்யாவின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு செலுத்துவதாகவும் ஸ்வியாடெக் கூறினார்.தோல்வி குறித்து பேசிய அமெரிக்க வீராங்கனை கோகோ இறுதிப் போட்டி வரை வந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்தப் போட்டியை அனுபவமாக எடுத்து கொண்டு, பாடத்தை கற்று கொண்டு, மீண்டு வருவேன் என்று தெரிவித்தார்.