ராத்திரியெல்லாம் தூங்க முடியாம தவிச்சேன்.. மனம் திறக்கும் செரீனா
விம்பிள்டன்: விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ள செரீனா வில்லியம்ஸ், இறுதிப் போட்டிக்கு முதல் நாள் இரவெல்லாம் சரியாக தூங்க முடியாமல் தவித்ததாக கூறியுள்ளார். அதேசமயம், இந்த வெற்றி தனக்கு பெரும் நம்பிக்கையை ஊட்டுவதாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மகளிர் ஒற்றையர் போட்டிகளில் 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார் செரீனா. மேலும் இதே அளவிலான பட்டத்தை வென்றுள்ள ஸ்டெபி கிராபின் சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். இன்னும் 2 பட்டம் வென்றால் அவர் மார்கரெட் கோர்ட்டின் சாதனையை எட்ட முடியும்.
34 வயதாகும் செரீனா வில்லியம்ஸ் தனது பட்ட பசி இன்னும் அடங்கவில்லை என்றும், வருடத்திற்கு ஒரு பட்டம் வெல்ல வேண்டும் என்றும் ஆர்வத்துடன் கூறுகிறார். விம்பிள்டன் அனுபவம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியிலிருந்து...

வருடத்திற்கு ஒன்னு போதும்
எனக்குள் இன்னும் பசி இருக்கிறது. அதை அடக்க வருடத்திற்கு ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டமாவது தேவை. ஒன்று போதும். எத்தகைய நெருக்கடி இருந்தாலும் ஒரு பட்டமாவது வென்று விட வேண்டும்.

இரவெல்லாம் தங்கவில்லை
ஏஞ்சலிக் கெர்பரை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ள சில உத்திகளை வகுத்தேன். இரவெல்லாம் சரியாக தூங்கவில்லை. சற்று பதட்டமாகவும் இருந்தது. ஆனால் பதட்டத்தை தணித்துக் கொண்டேன்.

பாசிட்டிவ்ஸ் தான் முக்கியம்
எப்போதுமே என்னிடம் உள்ள பாசிட்டிவ்ஸ் பற்றி மட்டுமே நான் கவனிப்பேன். நெகட்டிவ்ஸ் குறித்துக் கவலையே பட மாட்டேன். எனது சாதகங்களை வைத்து என்னுடைய குறைகளை சரி செய்ய முயற்சிப்பேன். அதில் பலமுறை வென்றுள்ளேன்.

பிரெஞ்சு ஓபனில் தோற்றது
பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் நான் தோற்றது எனக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. அதில் நான் சுதாரித்துக் கொண்டேன். எனது பயிற்சியாளர் பாட்ரிக்கும் கூட சில விஷயங்களை சுட்டிக் காட்டினார். அதை நான் எடுத்துக் கொண்டு சரி செய்தேன். இப்போது அது கை கொடுத்தது என்றார் செரீனா வில்லியம்ஸ்.


Click it and Unblock the Notifications