லண்டன்: 8வது முறையாக விம்பிள்டன் பட்டம், 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்ற இலக்குடன் வந்த அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை 6-3, 6-3 என்ற செட்களில் வென்று அதிர்ச்சி அளித்தார் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர். இதன் மூலம் முதல் முறையாக விம்பிள்டன் பட்டத்தை அவர் வென்றார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த பைனலில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை சந்தித்தார் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்.

குழந்தை பிறந்ததால், ஓராண்டுக்கு மேலாக விளையாடாமல் இருந்தார் செரீனா. கடந்த சில மாதங்களாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடி வருகிறார். விம்பிள்டன் போட்டியின் பைனலுக்கு 10வது முறையாக முன்னேறினார். இதுவரை 7 முறை பட்டம் வென்றுள்ளார்.
8வது விம்பிள்டன் மற்றும் 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று, அதிக பட்டம் வென்ற சாதனையை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இன்று நடந்த ஆட்டத்தில் துவக்கத்தில் இருந்தே கெர்பரின் கையே ஓங்கி இருந்தது. செரீனா கடுமையாக போராடிய போதும், அவரால் புள்ளிகளை சேர்க்க முடியவில்லை. இறுதியில் 6-3, 6-3 என தோல்வியடைந்தார். கடந்த 2016 பைனலில் கெர்பரை வென்று செரீனா பட்டம் வென்றிருந்தார்.

2016ல் ஆஸ்திரேலிய மற்றும், யுஎஸ் ஓபன் பட்டங்களை கெர்பர் வென்றிருந்தார். அதன்பிறகு அவர் வெல்லும் மூன்றாவது பட்டம் இதுவாகும்.