ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்ஸில் சானியா மிர்ஸாவுக்கு பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது என அமெரிக்காவின் டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக்ஸில் மகளிர் இரட்டையர் பிரிவு ஆகஸ்ட் 6ம் தேதி தொடங்குகிறது. கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகள் ஆகஸ்ட் 10ம் தேதி தொடங்குகிறது. தற்போது மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்களை சானியா மிர்ஸா முதலிடத்தில் இருப்பதால் என்பதால், அவர் இந்தியாவிற்கு பதக்கம் பெற்றுத்தருவார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர்.
ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் 4 முறை தங்கம் வென்றுள்ள அமெரிக்காவின் டென்னிஸ் வீராங்கனை செரினா இது குறித்து கூறியதாவது: ரியோ ஒலிம்பிக்ஸில் சானியா மிர்ஸா பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது. சானியா புதிய இணையுடன் இணைந்து விளையாடினாலும், ரியோ ஒலிம்பிக்ஸில் எதிரணிக்கு நெருக்கடியை கொடுப்பார்.
இரட்டையர் பிரிவில் மிகச் சிறந்த வீராங்கனையான சானியாவுக்கு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை எவ்வாறு வெல்வது என தெரியும். சானியா மிர்ஸா இரட்டையர் பிரிவில் மட்டுமல்லாது மகளிர் ஒன்றையர் பிரிவிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று கூறினார்.
இந்தியா சார்பில் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸா, பிரார்த்தனா தாம்ப்ரே இணை விளையாடுகிறது. இதேபோல கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸா, ரோகன் போபண்ணாவுடன் இணைந்து விளையாடுகிறார்.
சானியா ரியோ ஒலிம்பிக்ஸ் கிராமத்திற்கு சென்ற போது கூறியதாவது: இது நீண்ட தெலை தூர பயணம் என்ற போதிலும் ஒலிம்பிக்ஸில் விளையாடுவது மற்றும் இந்தியாவிற்காக விளையாடுவது உற்சாகமளிக்கிறது என்று கூறினார்.