இன்சியான்: ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்பு இரட்டையர் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா- சாகேத் மைனேனி ஜோடி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இதன் மூலம் ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு ஆறாவது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
தென் கொரியாவில் உள்ள இன்சியான் நகரில், 17வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. நேற்றைய தினம் கலப்பு இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா-சாகேத் மைனேனி இணை சீன தைபேயின் ஹிசைன் யின் - ஹோ ஜிங் இணையை எதிர்த்து விளையாடியது.

தங்கப்பதக்கம்
இந்தப்போட்டியில் முதல் செட்டை சானியா ஜோடி 6-4 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரண்டாவது செட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சானியா ஜோடி அந்த செட்டை கைப்பற்றி, தங்கப்பதக்கத்தை வென்றது.
இளைய வீரர்கள்
இது குறித்து கருத்து கூறிய சானியா இன்சான் போட்டிக்காக இளம் வீரர், வீராங்கனைகளுடன் தான் வந்தோம். இவர்கள் என்னை விட 7 முதல் 8 வயது இளையவர்கள். எனது தங்கைகளைப் போல உள்ளனர். இவர்கள் எந்த உதவி கேட்டாலும் செய்து தர தயாராக உள்ளேன். இவர்களுடன் சேர்ந்து மொத்தம் 6 தங்கப்பதக்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
2018லும் தொடரும்
மொத்தத்தில் இந்திய டென்னிசிற்கு இது சிறப்பான வாரமாக அமைந்து விட்டது. இது அடுத்த ஆசிய விளையாட்டிலும் (2018) தொடரும் என நம்புகிறேன் என்றார்.
கடைசி நேரத்தில்
கடைசி நேரத்தில் இங்கு வருவது என்று எடுத்த முடிவு சரியானது தான். இதன் முக்கிய நோக்கம், இந்தியா அதிக பதக்கம் வெல்ல உதவ வேண்டும் என்பது தான். இதை சரியாக செய்து விட்டேன்.
பதக்கங்கள்
ஏனெனில், நான் பங்கேற்ற பெண்கள், கலப்பு இரட்டையில் 2 பதக்கம் (தலா ஒரு தங்கம், வெண்கலம்) பெற்றுள்ளேன். இதுவரை பங்கேற்ற 4 ஆசிய விளையாட்டிலும் சேர்த்து, 8 பதக்கம் (2 தங்கம், தலா 3 வெள்ளி, வெண்கலம்) வென்றது உற்சாகம் தருகிறது என்றார் சானியா மிர்சா.
6 தங்கம் வென்றுள்ள இந்தியா தொடர்ந்து பதக்கப்பட்டியலில் 9 வது இடத்திலேயே நீடிக்கிறது.