லண்டன்: குழந்தை பிறந்து 10 மாதங்களே ஆகியுள்ள நிலையில், விம்பிள்டன் போட்டியின் பைனலில் 10வது முறையாக விளையாட உள்ளார். புதிய சாதனைக்காக காத்திருக்கிறார்.
டென்னிஸ் உலகின் முடிசூடா மகாராணியாக விளங்கும் 36 வயதாகும் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், விம்பிள்டன் போட்டியின் பைனலில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை சந்திக்க உள்ளார்.
கடந்தாண்டு ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பட்டம் வென்ற பிறகு, தான் கர்ப்பமாக இருப்பதாக செரீனா அறிவித்தார். அதன்பிறகு செப்டம்பரில் குழந்தை பிறந்து, பின்னர் காதலனை திருமணம் செய்தார்.
ஓராண்டுக்கு மேலாக விளையாடாமல் இருந்த செரீனா, கடந்த சில மாதங்களாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடி வருகிறார். விம்பிள்டன் போட்டியின் பைனலுக்கு முன்னேறியுள்ளார். 10வது முறையாக விம்பிள்டன் பைனலில் அவர் விளையாட உள்ளார். இதுவரை 7 முறை பட்டம் வென்றுள்ளார்.
எட்டாவது முறையாக விம்பிள்டன் பட்டத்துடன், அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையை சமன் செய்ய உள்ளார் செரீனா. இதுவரை அவர் 23 பட்டங்களை வென்றுள்ளார். மேலும் ஒரு பட்டம் வென்றால், மார்க்கரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார்.
1999ல் யுஎஸ் ஓபனில் முதல் முறையாக பட்டம் வென்ற செரீனா வில்லியம்ஸ், தற்போது 30வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பைனலில் விளையாட உள்ளார்.