பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் அணிந்துள்ள கறுப்பு நிற கேட்சூட் உடையைப் பார்த்தவர்கள், இதென்ன வித்தியாசமாக இருக்கிறதே என்று நினைத்திருக்கலாம். ஆனால், அதன் ரகசியம் தெரிந்தால் அதிர்ச்சி அடைவீங்க.
அமெரிக்காவைச் சேர்ந்த செரீனா வில்லியம்ஸ் ஆக்ரோஷமான ஆட்டத்துக்கு மட்டும் சொந்தக்காரர் இல்லை. விதவிதமான வசீகரிக்கும் ஆடைகளை அணிவதிலும் மிகுந்த விருப்பம் உள்ளவர்.
கடந்த ஆண்டு ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின்போது, தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார் 36 வயதாகும் செரீனா. கர்ப்பத்துடன் விளையாடி அதில் பட்டமும் வென்றார்.
கடந்தாண்டு செப்டம்பரில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. கடந்தாண்டு ஜனவரியில் இருந்து டென்னிஸ் போட்டிகளில் விளையாடாமல் இருந்த செரீனா, கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபனில் பங்கேற்றுள்ளார்.
கிட்டத்தட்ட 16 மாதங்களுக்குப் பிறகு, குழந்தை பிறந்த 9 மாதங்களுக்குப் பிறகு செரீனா மீண்டும் களமிறங்கியுள்ளார். 23 கிராண்ட் ஸ்லாம் வென்றுள்ள செரீனா முதல் சுற்றில் கிரிஸ்டினா பிளிஸ்கோவாவை 7-6, 6-4 என்ற கணக்கில் வென்றார்.
இந்த பிரெஞ்ச் ஓபனில் அவர் அணிந்திருக்கும் கறுப்பு நிறத்தில், உடலைப் பிடிக்கும் வகையிலான உடை அனைவரையும் கவர்ந்தது. இந்த கேட்சூட் குறித்த ரகசியத்தை அவர் தெரிவித்தார்.
குழந்தை பிறந்தபிறகு, அடிக்கடி ரத்தக் கட்டு எனப்படும் பிளட் காட் ஏற்படுகிறது. இந்த உடையால், ரத்த ஓட்டம் சீராக இருக்கிறது. இதை அணிவதால் நான் ஒரு சூப்பர் ஹீரோ போல் உணர்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
குழந்தை பெற்றெடுத்தப் பிறகு, உடல் நல பாதிப்புகள் இருந்தபோதும், மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என்று துடிக்கும் ஒவ்வொரு தாயின் நம்பிக்கையை, மனதைரியத்தை உணர்த்தும் வகையில் இந்த உடை இருப்பதாக நான் கருதுகிறேன் என்று செரீனா கூறியதுதான், தாய்மையின் பெருமை. இனி கேட்சூட்டை தப்பாக யாரும் பார்க்க மாட்டார்கள்.