லெக்ஸிங்க்டன் : டாப் ஸீட் ஓபன் எனும் புதிய டென்னிஸ் தொடரில் தன் மூத்த சகோதரி வீனஸ் வில்லியம்ஸ்-ஐ வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்.
இந்தப் போட்டியில் ஒரு கட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸ் வெற்றிக்கு அருகே இருந்தார். எனினும், செரீனா வில்லியம்ஸ் போராட்டத்தை வெளிப்படுத்தி வென்றார்.
டாப் ஸீட் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில், லெக்ஸிங்க்டன் நகரில் நடைபெறுகிறது.
அமெரிக்க ஓபன் தொடருக்கு முன்னர் நடக்கும் டென்னிஸ் தொடர் என்பதால் அதற்கான முன்னோட்டமாக இந்த தொடர் அமைந்தது.
கடந்த பிப்ரவரி முதல் டென்னிஸ் போட்டிகளில் ஆடாமல் இருந்த செரீனா வில்லியம்ஸ் இந்த தொடரை பயிற்சிக் களமாக பயன்படுத்திக் கொண்டார்.
முதல் சுற்றில் பெர்னார்டா பேராவை 4 - 6, 6 - 4, 6 - 1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் செரீனா. மறுபுறம் முதல் சுற்றில் விக்டோரியா அசரென்காவை 6 - 3, 6 - 2 என்ற நேர் செட்களில்வீழ்த்தி இருந்தார்.
இரண்டாவது சுற்றில் சகோதரிகளான செரீனா வில்லியம்ஸ் - வீனஸ் வில்லியம்ஸ் மோதினர். இருவருக்கும் இடையே நடக்கும் போட்டிகளில் அனல் பறக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
வீனஸ் வில்லியம்ஸ் முதல் செட்டை 6 - 3 என எளிதாக கைப்பற்றினார். இரண்டாவது செட்டை செரீனா வில்லியம்ஸ் 6 - 3 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.
வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் முதலில் செரீனா 2 - 1 என முன்னிலையில் இருந்தார். அப்போது வீனஸ் வீறு கொண்டு எழுந்து 4 - 2 என்ற நிலையை அடைந்தார். அப்போது செரீனா சுதாரித்துக் கொண்டார். முடிவில் 6 - 4 என மூன்றாவது செட்டை கைப்பற்றினார் செரீனா.
யப்பா பாபர்.. நீதான்பா டீமை காப்பாத்தணும்.. பந்தாடிய இங்கிலாந்து.. மழையால் தப்பித்த பாகிஸ்தான்!
3 - 6, 6 - 3, 6 - 4 என்ற செட் கணக்கில் வீனஸ் வில்லியம்ஸ்-ஐ வீழ்த்தினார் செரீனா. வீனஸ் - செரீனா இடையே நடந்த மோதல்களில் இது செரீனாவின் 19வது வெற்றி ஆகும். வீனஸ் 12 முறை வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வெற்றி மூலம் டாப் ஸீட் ஓபன் தொடரின் காலிறுதிக்கு முன்னேறி உள்ளார் செரீனா. அந்த சுற்றில் ஷெல்பி ரோஜர்ஸ்-ஐ சந்திக்க உள்ளார்.