சான் ஜோஸ் : சிலிக்கான் வேலி கிளாசிக் தொடரில் செரீனா வில்லியம்ஸை முதல் சுற்றில் படு நேர்த்தியாக வீழ்த்தி பெரும் அதிர்ச்சி வைத்தியம் அளித்த ஜோஹனா கொண்டா, செரீனாவை புகழ்ந்துள்ளார்.
முதல் சுற்று ஆட்டத்தில் தனது டென்னிஸ் வாழ்வின் மோசமான தோல்வியை பதிவு செய்தார் செரீனா. இவரை எதிர்த்து ஆடிய ஜோஹனா கொன்டா 6-1, 6-0 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார்.
செரீனா வில்லியம்ஸ் உலக பெண்கள் டென்னிஸ் தரவரிசையில் நீண்ட காலம் முதல் இடத்தில் இருந்தவர். இருபத்தி மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவர். கடந்த ஆண்டு பேறு கால ஒய்வுக்காக பல மாதங்கள் டென்னிஸ் ஆடாமல் ஓய்வில் இருந்து வந்தார். நீண்ட ஓய்வுக்கு பின் களத்தில் குதித்தவர், பெரிய வெற்றிகள் எதுவும் பெறவில்லை.
அதை மாற்றும் வகையில், கடந்த மாதம் நடந்து முடிந்த விம்பிள்டனில் இறுதிப் போட்டி வரை தகுதி பெற்று அவர் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். எனினும் இறுதிப் போட்டியில் ஏஞ்ஜெலிக் கெர்பரிடம் தோல்வி அடைந்தார். அதற்கு அடுத்ததாக நேற்று அவர் பங்கேற்ற சிலிக்கான் வேலி கிளாசிக் தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்து, முதல் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறி அதிர்ச்சி அளித்துள்ளார்.
ஜோஹனா கொன்டாவுக்கு எதிரான முதல் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் துவக்கத்தில் ஆதிக்கம் செலுத்தி, முதல் செட்டின், முதல் கேமை கைப்பற்றினார். அடுத்து அவர் செய்த தவறால் கொன்டா தன் முதல் கேமை வென்று 1-1 என சம நிலையில் இருந்தார். தான் செய்த முதல் தவறில் இருந்து சுதாரிக்காத செரீனா, தன் இயல்பை மீறி எராளமான தவறுகள் செய்தார். இதனால், முதல் செட்டை 6-1 என கைப்பற்றினார் கொன்டா.
இரண்டாவது செட்டில் வேகத்தை காட்டிய கொன்டா தொடர்ந்து ஆறு கேம்களை கைப்பற்றி 6-0 என இரண்டாவது செட்டையும் கைப்பற்றினார். இதன் மூலம் 6-1, 6-0 என முதல் போட்டியில் வெற்றி பெற்றார் கொன்டா. தொடர்ந்து 12 கேம்களை இழந்த செரீனா, தன் முதல் கேமை மட்டுமே வென்று மோசமான தோல்வியை பதிவு செய்தார்.
இந்த தோல்வி குறித்து பேசிய செரீனா, "அவர் இரண்டாவது செட்டில் அபாரமாக ஆடினார் என நினைக்கிறேன். முதல் செட்டில் நான் ஒரு மனதாக இருக்கவில்லை. அதில் அவர் அதிகம் நம்பிக்கை பெற்றார். அதை வைத்து ஆட்டத்தை தன் வசமாக்கிவிட்டார். இரண்டாவது கேமில் சில விஷயங்கள் தவறாக சென்றுவிட்டன" என்றார்.
இந்த வெற்றி குறித்து பேசிய ஜோஹனா கொன்டா, "செரீனாவோடு ஒரே களத்தில் நிற்பது முழுமையான கவுரவம்" என மரியாதையாக குறிப்பிட்டார். அடுத்த போட்டிகளுக்கு தான் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.