செரீனா மனசில் உதித்த காதல்
இரும்புப் பெண்ணாக அறியப்படும் செரீனாவுக்குள் காதல் பூத்தபோது அனைவருக்குமே ஆச்சரியம்தான். இப்படி பிசியாக ஓடிக் கொண்டிருக்கும் செரீனாவுக்குள் காதலா என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். ஆனால் அந்தக் காதலை இறுகப் பற்றிக் கொண்ட செரீனா இன்று காதலரையே மணந்து சூப்பராக குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார். ஒலிம்பியா என்ற செல்ல மகளும் இவர்களது குடும்பத்தில் இப்போது ஒரு முக்கிய அங்கம்.
காதல் கணவர்
செரீனாவுக்கும், கணவர் அலெக்ஸிஸுக்கும் இடையே காதல் பூத்ததே ஒரு மோதலில்தான். நம்ம தமிழ் சினிமா பட பாணியில்தான் அதுவும் இருந்துள்ளது. இதை செரீனாவே ஒரு பேட்டியில் விவரித்துள்ளார். அது 2015ம் ஆண்டு. ரோம் நகரில் முகாமிட்டிருந்தார் செரீனா. இத்தாலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்காக அங்கு போயிருந்தார்.
ஹோட்டலில் உரசல்
அவர் தங்கியிருந்த அதே ஹோட்டலில்தான் அலெக்ஸிஸும் தங்கியுள்ளார். அன்று செரீனா தனது நண்பர்கள் சிலரோடு ஹோட்டல் ரெஸ்டாரெண்ட்டில் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். அப்போது அவர்கள் உட்கார்ந்திருந்த டேபிளுக்கு வந்த அலெக்ஸிஸ் அவரும் அமர்ந்துள்ளார். இதைப் பார்த்த செரீனா, ஹலோ.. வேற டேபிளுக்குப் போங்க என்று கூறியுள்ளார். அதைக் கேட்ட அலெக்ஸிஸ்.. நான் எதுக்குப் போகணும்.. போக மாட்டேன் என்று கூறியுள்ளார்.
திமிர் பிடிக்கும்
"அலெக்ஸிஸின் அந்த திமிர் என்னை பட்டென்று கவர்ந்தது. அவரை எதிர்த்துப் பேசத் தோன்றவில்லை. உடனே இருவரும் அறிமுகமாகி விட்டோம். அதன் பிறகு அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தோம். இருவரும் நெருங்கிக் காதலிக்க ஆரம்பித்த நிலையில் வயிற்றில் ஒலிம்பியா உதயமானாள். பிறகு நாங்கள் மூவரும் குடும்பமானோம்" என்று தனது மலரும் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் செரீனா வில்லியம்ஸ்.
செரீனா மனசில் அலெக்ஸிஸ்
அலெக்ஸிஸுக்கு சுத்தமாக டென்னிஸ் தெரியாது. அதேபோல அவரது டேஸ்ட்டுக்கு எதிரானவர் செரீனா. ஆனாலும் செரீனாவின் இதயத்தில் பளிச்சென ஒட்டிக் கொண்டார் அலெக்ஸிஸ். அதேபோலத்தான் அங்கும். இதயங்கள் இடம் மாறிய பின்னர் டேஸ்ட்டாவது, ஒன்னாவது.. இருவருக்கும் ஒரே மாதிரியான டேஸ்ட்டாக இருந்தது அவர்களுக்கு இடையே இருந்த காதல் மட்டும்தான். உருகி உருகி காதலித்தனர்.
ஒலிம்பியா பாப்பா
இவர்களின் இந்த தீவிரக் காதலில் உதித்த ஒலிம்பியா, 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறந்தாள். அதன் பின்னர் இருவரும் நவம்பரில் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின்னர் இருவரும் தத்தமது தொழிலில் பிசியாகவே உள்ளனர். இணைந்து சந்திக்கும் நேரம் குறைந்தே இருந்தது. ஆனால் தற்போது குவாரன்டைன் வந்து இவர்களையும், குழந்தை ஒலிம்பியாவையும் எங்கும் போக விடாமல் பிணைத்து வைத்துள்ளது.