லண்டன்: 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று சாதனை புரிய காத்திருக்கும் செரீனா வில்லியம்ஸ், விம்பிள்டன் அரை இறுதிக்கு நுழைந்துள்ளார். அதைவிட போட்டிக்குப் பிறகு அவர் மிகவும் எளிமையாக ரசிகர்களுடன் கலந்துரையாடியது அவர் மீதான மதிப்பை கூட்டியுள்ளது. ஒரு ரசிகருக்கு செல்பி எடுக்க உதவி செய்து பாராட்டுகளை குவித்து வருகிறார்.
அமெரிக்காவைச் சேர்ந்த, 36 வயதாகும் செரீனா வில்லியம்ஸ், டென்னிஸ் உலகில் முடிசூடா மகாராணியாக உள்ளார். இதுவரை தனிநபரில் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 24வது பட்டம் வென்று, அதிக பட்டம் வென்ற மார்க்கரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்யும் முயற்சியில் செரீனா உள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றபோது, தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் செரீனா. பெண் குழந்தைக்கு தாயாகி, பின்னர் காதலரை மணந்தார் செரீனா. அதனால் கடந்த ஓராண்டாக விளையாடாமல் இருந்த செரீனா, சமீபத்தில் மீண்டும் களமிறங்கினார். 8வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வெல்லும் இலக்குடன் களமிறங்கியுள்ளார் உலகின் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான செரீனா.
2015, 2016ல் விம்பிள்டன் பட்டம் வென்ற அவர், கடந்த சீசனில் விளையாடவில்லை. இந்த சீசனில் விட்டதைப் பிடிக்கும் முனைப்பில் உள்ளார். கால் இறுதியில் இத்தாலியின் கமிலா ஜியோர்கிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் செட்டை இழந்த நிலையில் 3-6, 6-3, 6-4 என வென்றார் செரீனா. புல்தரையில் செரீனாவின் 100வது வெற்றி இதுவாகும். 11வது முறையாக விம்பிள்டன் அரை இறுதிக்கு நுழைந்துள்ளார்.
When you need a helping hand, @serenawilliams knows what to do 🤳#Wimbledon pic.twitter.com/RufDY6jIbX
— Wimbledon (@Wimbledon) July 10, 2018
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, காலிறுதி ஆட்டத்துக்குப் பிறகு, ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார் செரீனா. அப்போது ஒரு ரசிகர் தனது மொபைலில் செல்பி எடுக்க முயன்றார். ஆனால், சரியாக எடுக்க முடியவில்லை. உடனே அவருடைய செல்போனை வாங்கி, அதில் செல்பி எடுத்து கொடுத்தார் செரீனா. விளையாட்டில் கில்லியாக இருந்தாலும், ரசிகர்களை மதிக்கும் செரீனாவின் இந்த செய்கை, பெரும் பாராட்டை பெற்றுத் தந்துள்ளது.