அபுதாபியில் நடந்த தொடர்
35 வயதான ரபேல் நடால், கடந்த வாரம் அபுதாபியில் நடந்த உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் கண்காட்சி போட்டியில் பங்கேற்றார். இதன் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரேவுடன் மோதிய நடால் தோல்வியை சந்தித்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற 2வது ஆட்டத்தில் கனடாவின் டெனிஸ் ஷபோவலோவிடமும் வீழ்ந்ததால் தாயகம் திரும்பினார்.
கொரோனா தொற்று உறுதி
இந்நிலையில் நாடு திரும்பியவுடன் நடாலுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
எங்கிருந்து வந்தது
அவருக்கு எங்கிருந்து கொரோனா பரவியது என்ற விஷயம் பரபரப்பாகியுள்ளது. அபுதாபி தொடரின் போது ஸ்பெயினின் முன்னாள் மன்னர் ஜுவான் கார்லோஸ் மற்றும் நடேல் ஆகியோர் இணைந்து விருந்து உண்டனர். அதன்பிறகு அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த போதும் முகக்கவசம் அணியவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்து தான் நடாலுக்கு கொரோனா பரவியதா? அல்லது நடாலிடம் இருந்து மன்னருக்கு கொரோனா பரவி விடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
நடாலுக்கு வந்த சோதனை
ரஃபேல் நடாலுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு கடந்த 4 மாதங்களாக எந்தவித தொடரிலும் பங்கேற்காமல் இருந்தார். விம்பிள்டன், டோக்கியோ ஒலிம்பிக்ஸ், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போன்ற முக்கிய தொடர்களையும் நழுவ விட்டார். தற்போது கம்பேக் கொடுக்கலாம் என்று நினைத்தபோதும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.