நியூயார்க்: பெலாரஷ்ய வீராங்கனை அரினா சபலென்கா 2025 யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்று டென்னிஸ் உலகில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளார். அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை நேர் செட்களில் வீழ்த்தி, யுஎஸ் ஓபன் 2025 மகளிர் ஒற்றையர் பட்டத்தை இரண்டாவது முறையாகத் தட்டிச் சென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம், டென்னிஸ் உலகின் முடிசூடா ராணிகளில் ஒருவரான செரீனா வில்லியம்ஸின் சாதனையை சமன் செய்துள்ளார்.
ஆர்தர் ஆஷ் மைதானத்தில் அனல் பறந்த இறுதிப் போட்டியில், சபலென்கா 6-3, 7-6 (3) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி, வெறும் ஒரு மணி நேரம் 34 நிமிடங்களில் சாத்தியமானது என்பது குறிப்பிடத்தக்கது. சபலென்காவின் சக்திவாய்ந்த சர்வீஸ்களும், அனல் பறக்கும் ஷாட்களும் அனிசிமோவாவுக்கு பெரும் சவாலாக அமைந்தன. ஆஸ்திரேலியன் ஓபன் பட்டங்களை இரண்டு முறை வென்ற சபலென்காவிற்கு, இது நான்காவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

2014-ஆம் ஆண்டு செரீனா வில்லியம்ஸ் யுஎஸ் ஓபன் பட்டத்தை அடுத்தடுத்து வென்று இருந்தார். அதன் பிறகு இந்தச் சாதனையை நிகழ்த்தும் முதல் வீராங்கனை என்ற பெருமையை சபலென்கா பெற்றுள்ளார். இந்த ஆண்டில் விம்பிள்டன் மற்றும் பிரெஞ்சு ஓபன் தொடர்களில் இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வியைத் தழுவிய சபலென்கா, இந்த வெற்றியின் மூலம் அந்த ஏமாற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும், விம்பிள்டன் அரையிறுதியில் தன்னை வீழ்த்திய அனிசிமோவாவை இந்த இறுதிப் போட்டியில் தோற்கடித்து, பழிதீர்த்துக் கொண்டார்.
24 வயதான அனிசிமோவாவுக்கு இது மற்றுமொரு கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டி தோல்வியாக அமைந்துள்ளது. முன்னதாக, விம்பிள்டன் இறுதிப் போட்டியில் இகா ஸ்வியாடெக்கிடம் படுதோல்வி அடைந்திருந்தார். இருப்பினும், இந்தத் தோல்விக்குப் பிறகும், அவர் மகளிர் டென்னிஸ் தரவரிசையில் 4-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இறுதிப் போட்டியின் தொடக்கத்தில் அரினா சபலென்கா சற்று தடுமாறினார். அனிசிமோவா தொடக்கத்திலேயே ஆக்ரோஷமாக விளையாடி, சபலென்காவுக்கு அழுத்தம் கொடுத்தார். முதல் கேமிலேயே மூன்று பிரேக் பாயிண்ட்டுகளை சபலென்கா காப்பாற்ற வேண்டியிருந்தது. அமெரிக்க வீராங்கனை கிடைத்த வாய்ப்புகளைத் தவறவிட்டார்.
பின்னர் சுதாரித்துக் கொண்ட சபலென்கா, ஒரு பிரேக் எடுத்து முன்னிலை பெற்றார். ஆனால், அனிசிமோவா உடனடியாக பதிலடி கொடுத்து, 0-2 என்ற பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு வந்தார். ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில், அனிசிமோவா மேலும் ஒரு பிரேக்கை எடுத்து முன்னிலை பெற்றார்.
ஆனால், அரினா சபலென்கா, எளிதில் விட்டுக்கொடுக்கவில்லை. மீண்டும் ஒருமுறை அனிசிமோவாவின் சர்வீஸை முறியடித்து, ஆட்டத்தின் போக்கை தன் பக்கம் திருப்பினார். நிதானமாக தனது சர்வீஸை தக்கவைத்து, 38 நிமிடங்களில் முதல் செட்டைக் கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டின் தொடக்கத்தில் அனிசிமோவா நம்பிக்கையுடன் விளையாடினார். முதல் செட்டை இழந்தாலும், மீண்டும் போராடுவேன் என்பதை தனது ஆட்டத்தின் மூலம் வெளிப்படுத்தினார். ஆனால், உலகத் தரவரிசையில் முதலிடத்தில் ஏன் இருக்கிறார் என்பதை சபலென்கா நிரூபித்தார். ஆட்டத்தின் முடிவில் சபலென்கா 6-3, 7-6 (3) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.