விம்பிள்டன்: ரோஜர் பெடரர் தன் இணை போட்டியாளரான ரபேல் நடாலை பற்றி சமீபத்தில் கூறுகையில், ldquo;நாங்கள் டென்னிஸின் லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ rdquo; என குறிப்பிட்டார். தற்போது இருவரும், விம்பிள்டன் ஓபன் தொடரில் பங்கேற்க உள்ள நிலையில், பெடரர் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. டென்னிஸ் உலகில், பெடரருக்கு இணையான போட்டியாளர் என்றால் அது நடால் மட்டுமே. இருவருக்கும் களத்தில் நடக்கும் போட்டி ஒரு யுத்தம் போன்றது. பட்டங்களை கைப்பற்றுவதிலும் இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த யுத்தம் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இதே விம்பிள்டன் தொடரில் தான் தொடங்கியது. தொடர்ந்து இரண்டு விம்பிள்டன் இறுதியில் நடாலை வீழ்த்தி பெடரர் வெற்றி பெற, மூன்றாவது முறை நடால் பெடரரை வீழ்த்தி டென்னிஸ் உலகில் தன் சகாப்தத்தை நிறுவினார். சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற அந்த போட்டியே டென்னிஸ் வரலாற்றில் மறக்க முடியாத போட்டியாகும். ஆடவர் டென்னிஸ் ரசிகர்களை பொறுத்தவரை ஒன்று பெடரர் ரசிகராக இருக்க வேண்டும் அல்லது நடால் ரசிகராக இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கிய பெருமை இவர்களையே சாரும். சமீபத்தில் பெடரர் அளித்த பேட்டியில் நடால் மற்றும் தனக்கு இடையில் உள்ள போட்டியை குறித்து கூறுகையில், ldquo;மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இடையில் நீண்ட கால போட்டி உள்ளது. எனக்கும், நடாலுக்கும் அதே போன்ற போட்டி உள்ளது. அவர்கள் இருவரும் வேறுபட்டவர்கள் என்றாலும் மிகச்சில ஒற்றுமைகள் உண்டு. அதே போல், எங்களுக்கும் உண்டு rdquo; என்றார்.மேலும் கால்பந்துடன், டென்னிசை ஒப்பிட்டு கூறுகையில், ldquo;ஆனால், கால்பந்து களத்தில் அனைத்தும் வித்தியாசமாக இருக்கும். உங்கள் அணி சிறப்பாக இருந்தால், நீங்களும் சிறப்பாக இருப்பீர்கள். அந்த களம் பெரியது. பதினோரு நபர்கள் களத்தில் ஓடியாட வேண்டும். ஆனால், நாங்கள் ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்து இருப்போம். அவர்களை விட சிறப்பாகவே கட்டுப்படுத்துவோம் rdquo;. என்றார். அடுத்து நடக்கவிருக்கும் விம்பிள்டனில் இருவரும் ஆட உள்ளனர். இருவரும் களத்தில் சந்திப்பார்களா? என்பது இறுதி அல்லது அரையிறுதி ஆட்டங்கள் முடிவாகும் போதுதான் தெரியவரும். இரண்டு சிறந்த டென்னிஸ் நட்சத்திரங்களின் ஆட்டத்தை காண ஒட்டுமொத்த டென்னிஸ் ரசிகர்களும் ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.