ஆமாங்க.. கதறிக் கதறிதான் அழுதேன்.. ஏன் தெரியுமா.. செரீனா பரபரப்பு விளக்கம்
நியூயார்க்: நான் பலமுறை கதறி அழுதுள்ளேன்.. ஒவ்வொரு தோல்வியும் என்னை கதறி அழ வைத்துள்ளது. ஆனால் அதெல்லாம்தான் என்னை மேலும் வலுவாக்கின. தொடர் வெற்றிகளுக்கு அவை உரமாகின என்று கூறியுள்ளார் சாதனை ராணி செரீனா வில்லியம்ஸ்.
டென்னிஸ் உலகின் அழகு ராணியாக வலம் வந்தவர் மரியா ஷரபோவா. இவர் 'Unstoppable, My life so far" என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். அதில் தனது அனுபவங்களை தொகுத்துக் கொடுத்துள்ளார்.
தனது சக வீராங்கனைகள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அதில்தான் செரீனாவை மட்டம் தட்டி எழுதியுள்ளார். 2004ம் ஆண்டு நடந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 17 வயதாக இருந்தபோது தான் அடைந்த மிகப் பெரிய கிராண்ட்ஸ்லாம் வெற்றி குறித்தும் விவரித்துள்ளார்.

விம்பிள்டன் இறுதிப் போட்டி
அந்த ஆண்டு நடந்த விம்பிள்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மரியாவுடன் மோதியவர் செரீனா வில்லியம்ஸ். அப்போட்டியில் செரீனாவை வீழ்த்தி பட்டம் வென்றார் ஷரபோவா. இதுகுறித்து அவர் கூறுகையில், போட்டியில் தோற்ற பிறகு லாக்கர் ரூமுக்குச் சென்ற செரீனா வில்லியம்ஸ் அங்கு சத்தம் போட்டு அழுது கொண்டிருந்தார். அவரது அழுகை வித்தியாசமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

செரீனா என்னை வெறுத்தார்
ஒல்லிக் குச்சி போல இருந்து கொண்டு நான் அவரை வீழ்த்தி விட்டதாக அவர் நினைத்திருக்கலாம். என்னை அவர் வெறுத்திருக்கலாம். அப்படித்தான் நான் நினைக்கிறேன் என்று கூறியிருந்தார் ஷரபோவா. இதற்கு தற்போது செரீனா பதிலளித்துள்ளார். அதில் ஷரபோவாவின் புத்தகம் தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதாக அவர் அதிரடியாக கூறியுள்ளார்.

எனக்கு உடன்பாடில்லை
இதுகுறித்து செரீனா கூறுகையில், 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை நான் வென்றுள்ளேன். அதேசமயம் பல போட்டிகளில் தோல்வியும் அடைந்திருக்கிறேன். ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் நான் கதறி அழுவேன்.. இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. எல்லோரும் செய்வதுதான். இந்தப் புத்தகத்தில் கூறியிருப்பது முழுவதும் அவரது சொந்தக் கருத்து. அதில் பலவற்றில் எனக்கு உடன்பாடில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எல்லோரும் செய்வதுதானே
நான் அழுததை வித்தியாசமாக கூறியுள்ளார். அது சாதாரண இயல்பான விஷயம். அப்படித்தான் நான் நினைக்கிறேன். நாம் விளையாட்டின் மீது வைத்திருக்கும் நேசத்தின் பிரதிபலிப்பு அது. நாம் வெல்ல வேண்டும் என்று நினைத்து முழுமையாக அதில் ஈடுபட்டும் தோல்வி கிடைக்கும்போது வரும் ஏமாற்றத்தின் வெளிப்பாடு அது. அதில் என்ன தவறு இருக்கிறது என்றார் செரீனா வில்லியம்ஸ்.

பிரபல மோதல்
வில்லியம்ஸ் - ஷரபோவா மோதல் டென்னிஸ் உலகில் மிகப் பிரபலமானது. இருவரும் மோதிய போட்டிகளில் 20 முறை செரீனாதான் ஜெயித்துள்ளார். 2 முறை மட்டுமே ஷரபோவா வென்றுள்ளார். இருவரும் ஆடிய முதல் போட்டி 2004 மியாமி ஓபன் போட்டியாகும். அதில் செரீனா வென்றார். ஆனால் 2004 விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஷரோபவா அதிரடி காட்டி செரீனாவை வீழ்த்தினார்.

செரீனாவின் ஆதிக்கம்
இதைத் தொடர்ந்து 2004 டபிள்யூடிஏ இறுதிப் போட்டியில் செரீனாவை மீண்டும் வீழ்த்தினார் ஷரபோவா. ஆனால் அதன் பிறகு இருவரும் மோதிய போட்டிகளில் அனல் பறந்தது. அத்தனையும் செரீனா வில்லியம்ஸ் சொல்லி வைத்தாற் போல அதிரடி வெற்றிகளைக் குவித்தார். அதிலும் 3 போட்டிகள் மட்டுமே 3 செட்டுகளுக்குப் போனது. மற்ற அனைத்தையும் நேரடி செட்களில் வென்று கலக்கியவர் செரீனா வில்லியம்ஸ்.

தோல்வியுடன் குட் பை
மரியா ஷரபோவா 2020 பிப்ரவரியில் டென்னிஸ் உலகிலிருந்து விடை பெற்றார். அதற்கு முன்பாக 2019 அமெரிக்க ஓபன் போட்டியில் செரீனாவை சந்தித்தார் மரியா. அப்போட்டியில் ஒரே ஒரு மணி நேரத்தில் 6-1, 6-1 என்ற நேர் செட்களில் மரியாவை வீழ்த்தி அதிரடி காட்டினார் செரீனா வில்லியம்ஸ். அந்தத் தோல்வி தந்த அதிர்ச்சியை நீண்ட காலத்திற்கு மரியா மறக்கவில்லை.


Click it and Unblock the Notifications