டோமினிக்கா : இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் புதன்கிழமை 12ஆம் தேதி முதல் டோமினிக்கா நகரில் நடைபெறுகிறது. இந்த தொடரில் வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் இந்திய அணி இருக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அடைந்த தோல்வியை அடுத்து இந்திய டெஸ்ட் அணியில் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருக்கிறது. தற்போது இந்திய அணியின் சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இல்லாததுதான்.

ரிஷப் பண்ட் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட கே எஸ் பரத் விக்கெட் கீப்பிங் சிறப்பாக செயல்பட்டாலும் ஒரு பேட்ஸ்மேனாக எந்த ஒரு தாக்கத்தையும் அவர் ஏற்படுத்தவில்லை. கேஸ் பரத் கடைசியாக 8 இன்னிங்ஸில் விளையாடியிருக்கிறார். இந்த 8 இன்னிங்ஸுமே அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தான் ஆடி இருக்கிறார்.
இதில் கே.எஸ்.பரத் அடித்த ரன்கள் 8, 6, 23, 17, 3, 44, 5,23 ஆகிய ரன்கள் மட்டுமே ஆகும். இதில் ஒருமுறை கூட அவர் அரை சதம் அடிக்கவில்லை. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக கே எஸ் பரத்துக்கு பதிலாக அணியில் கூடுதல் விக்கெட் கீப்பராக இடம் பெற்றிருக்கும் இஷான் கிஷனை சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். இஷான் கிஷன் அதிரடியாக ஆடக்கூடிய வீரர் என்பதால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
மேலும் இந்திய அணியில் ஜடேஜாவை தவிர வேறு யாரும் இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லை. அந்த குறையை இஷான் கிஷன் தீர்க்கக்கூடும். எப்படி ரிஷப் பன்ட் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்ப்பாரோ, அதேபோல் இஷான் கிஷனும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்கக் கூடியவர். இதனால் ரிஷப் பண்ட்க்கு சரியான மாற்றாக இஷான் கிஷன் தான் இடம்பெற வேண்டும் என்று ரசிகர்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
கே எஸ் பரத்தை காட்டிலும் சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய திறமையை இஷான் கிஷன் நிரூபித்து இருப்பதால் அவருக்கு முன்னுரிமை வழங்குவது சரியாக இருக்கும் என்றும் கிரிக்கெட் வல்லுனர்களும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இதன் காரணமாக முதல் டெஸ்டில் விக்கெட் கீப்பராக யாரை சேர்ப்பது என்ற தலைவலி இந்திய அணி நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது.