
பஞ்சாப் அணி
நேற்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்து இருப்பதன் மூலமாக ப்ளே ஆப் சுற்றுக்குச் செல்லும் தகுதியைப் பஞ்சாப் அணி இழந்துள்ளது. அந்த போட்டியில் 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இருப்பதன் மூலம், இனிவரும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் பஞ்சாப் அணியால் 12 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். முதல் நான்கு இடங்களைப் பிடிப்பதற்கு 14 புள்ளிகள் தேவைப்படுகிறது.

பேட்ஸ்மேன் ராகுல்
பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை இந்த சீசனில் ஒரு கலவையான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. பெரும்பாலான போட்டிகளில் சிறப்பாக ஆடி இருந்தாலும் இறுதி ஓவர்களில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தோல்வியைத் தழுவியது. குறிப்பாக, அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுல் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் அவர் முன்னிலையில் உள்ளார்.

கேப்டன் ராகுல்
இருப்பினும் அவர் கேப்டன்சி குறித்துப் பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. இந்தக் கருத்தை எதிரொலித்து உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, தோனியை போல் அவர் அமைதியாக இருந்தாலும் தலைமைத்துவப் பண்பு அவரிடம் இல்லை என விமர்சித்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 25 ஐபிஎல் போட்டிகளில் கேப்டன்சி செய்திருக்கும் கே.எல்.ராகுல் 11 போட்டிகளில் வென்று 14-ல் தோல்வி அடைந்துள்ளார். இதனையடுத்து அவரைப் பார்த்தால் கேப்டன் போலவே தெரியலையே என்று அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.

விமர்சனம் இல்லை
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "ராகுல் எப்போதும் அட்ஜஸ்ட் செய்கிறார், மென்மையாகப் பேசுகிறார் இது கேப்டனாக இருக்கச் சரிப்பட்டு வராது. ராகுலிடம் தலைமைத்துவ பண்பு இல்லை அவர் மென்மையான குணம் படைத்தவர், இதனால் நீண்ட காலம் அவர் கேப்டனாக இருக்க முடியும் ஆனால் அது கேப்டன்சிக்குப் போதாது. தோனி போன்று அமைதியாக இருக்கிறார் ராகுல், அது பாசிட்டிவ் அம்சம்தான் பஞ்சாப் கேப்டனாக ராகுல் பொறுப்பைத் தோள்களில் சுமப்பதில்லை. இதனால் தான் தோனி போல அவர் அமைதியாக இருந்தாலும், தோனியை போல ஒரு வெற்றிகரமான கேப்டனாக அவரால் இருக்க முடியவில்லை.

பொறுப்பைச் சுமக்காத ராகுல்
அவர் அணியை நடத்தும் பொறுப்பைச் சுமக்காததால் ராகுல் முடிவுகளை யாரும் விமர்சிப்பதில்லை. ராகுல் உண்மையில் தலைமைத்துவ பண்புகளுடன் செயல்பட்டால் அவரது செயல்கள் மீது விமர்சனம் எழும் இப்போதைக்கு அவர் தலைமைப் பண்புக்கு ஏற்றவராக இல்லாததால் யாரும் அவரை விமர்சிப்பதில்லை" என்றார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை பஞ்சாப் அணி மொத்தம் 13 போட்டிகளில் ஆடியுள்ளது. அதில் 8 போட்டிகளில் தோல்வியடைந்துள்ள பஞ்சாப், வெறும் 5 போட்டிகளில் மட்டுமே வென்று, 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications