அகமதாபாத்: இன்னும் சில நாட்களில் அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பிரம்மாண்டமாக நடத்த பிசிசிஐ பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவது தெரிய வந்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் அக்.14ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் பிரம்மாண்டமாக நடத்தப்படவுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியா அணி அபாரமான ஃபார்மில் உள்ளது. அதேபோல் பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரில் ரெக்கார்ட் சேஸிங்கை செய்து கம்பீரமாக உள்ளது.

இதுவரை உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதே இல்லை. அந்த வரலாற்றை மாற்றும் நோக்கில் பாகிஸ்தான் அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதனால் இரு அணிகளும் மீண்டும் உலகக்கோப்பை தொடரில் மோதவுள்ளது ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத் மைதானத்தில் ஏற்கனவே 1.32 லட்சம் ரசிகர்கள் அமர்ந்து இந்தப் போட்டியை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது பிசிசிஐ தரப்பில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு முன் அகமதாபாத் மைதானத்தில் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் பாடகரான அர்ஜித் சிங் அகமதாபாத் மைதானத்தில் பாடல் பாடவுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஐபிஎல் தொடக்க விழாவிலும் அர்ஜித் சிங் தான் கலைநிகழ்ச்சிகளில் பாடினார். அதேபோல் இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் நேரில் காண பல்வேறு பிரபலங்களும் குவிய உள்ளதாக கூறப்படுகிறது. அதில் குறிப்பாக அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் அகமதாபாத் மைதானத்திற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் மூவருக்கும் ஏற்கனவே பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேரில் சந்தித்து உலகக்கோப்பை தொடருக்கான கோல்டன் டிக்கெட்டை வழங்கினார். அதேபோல் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை மட்டும் எதற்காக பிசிசிஐ மற்றும் ஐசிசி இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நடத்த வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.