4 கோப்பைகளை வென்ற ஐபிஎல் கேப்டன்... மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனின் தியரி
மும்பை : இந்திய துவக்க ஆட்டக்காரரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா ஐபிஎல்லில் இதுவரை தனது அணிக்காக 4 முறை கோப்பையை பரிசளித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் மற்ற வீரர்களை காட்டிலும் கேப்டனுக்கு தான் மிகவும் முக்கியத்துவம் குறைவாக இருக்க வேண்டும் என்பதே தன்னுடைய சக்சஸ் பார்முலா என்று அவர் கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் உள்ள நிலையில், மெதுவாக தான் அதற்கு தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தயாராகும் 8 அணிகள்
ஐபிஎல் போட்டிகளுக்கு 8 அணிகளும் தயாராகி வருகின்றன. வரும் 20ம் தேதியையொட்டி யூஏஇக்கு பயணம் மேற்கொள்ள இப்போதே தயாராகி வருகின்றன. இந்நிலையில் இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா கேப்டனாக உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும் தங்களது பயணத்திற்கு தயாராகி வருகின்றது. இந்த அணி ஐபிஎல் தொடர்களில் இதுவரை 4 முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அணியின் தாரக மந்திரம்
இந்நிலையில் பிடிஐக்கு அளித்த சிறப்பு பேட்டியில் பேசிய ரோகித் சர்மா, தன்னுடைய அணியின் தாரக மந்திரம் குறித்து வெளிப்படுத்தியுள்ளார். தன்னுடைய அணியில் கேப்டன் பொறுப்பில் உள்ள தனக்குதான் முக்கியத்துவம் குறைவு என்றும் அணியின் மற்ற வீரர்கள் அனைவருக்கும் அதிகமான முக்கியத்துவம் கொடுப்பதே தன்னுடைய கேப்டன்ஷிப் தியரி என்றும் அவர் கூறியுள்ளார்.

அது தன்னுடைய சுபாவம்
இது தனக்கும் தன்னுடைய அணியின் வெற்றிக்கும் மிகவும் உதவி புரிவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் மைதானத்தில் கோபம் ஏற்படும் சூழல்களிலும் தன்னுடைய அணி வீரர்களிடம் தான் அதை வெளிப்படுத்துவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தான் இதற்கென மெனக்கெடுவதில்லை என்றும் அது தன்னுடைய சுபாவம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தயாராக கால அவகாசம்
ஐபிஎல் துவங்குவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் உள்ள நிலையில் மெதுவாக தன்னுடைய வலிமை மற்றும் திறமைகளை மேம்படுத்தி வருவதாகவும் ரோகித் சர்மா குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய அணி வீரர்களை ஊக்குவிக்கவும் தனக்கு காலஅவகாசம் உள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால் துபாயில் 40 டிகிரி வெப்பநிலையில் விளையாடுவது சாதாரண விஷயமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications