கண்டி : 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அடுத்து சூப்பர் 4 சுற்றில் பங்கேற்க உள்ளது.அந்த சுற்றில் இந்திய அணி, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக ஆடி அதில் இரண்டு பெரிய வெற்றிகளை பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.
அதே சமயம், இந்திய அணி கே எல் ராகுலை அணியில் ஆட வைத்து பரிசோதனையும் செய்ய வேண்டும். இதில் தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ராகுல் நிலை : கே எல் ராகுல் கடந்த சில மாதங்களாக காயத்தில் சிக்கி இந்திய அணியில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்தார். அவர் இல்லாத நேரத்தில் அணியில் இஷான் கிஷன் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டார். அவர் சிறப்பாக ஆடியதால் ராகுல் அணியில் இடம் பெறாதது சிக்கலை ஏற்படுத்தவில்லை.
மீண்டு வந்தார் : அதே சமயம், 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கே எல் ராகுல் போன்ற அனுபவ வீரர் பங்கேற்பது அவசியம் என கருதியது இந்திய அணி நிர்வாகம். மறுபுறம், கே எல் ராகுல் விரைவாக காயத்தில் இருந்து மீண்டு ஆசிய கோப்பைக்கான அணியில் இணைந்தார்.
கீப்பீங் செய்ய முடியுமா? : அவர் குரூப் சுற்றுப் போட்டிகளில் ஆடவில்லை. சூப்பர் 4 சுற்றில் தான் பங்கேற்க இருக்கிறார். இந்த நிலையில், முந்தைய தினம் பயிற்சியின் போதே அவருக்கு மீண்டும் லேசான தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இப்படி இருக்கும் போது அவர் போட்டியில் எப்படி கீப்பிங் செய்ய முடியும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இஷான் கிஷன் : ராகுலின் பேட்டிங் திறனை மட்டுமே இந்திய அணி சோதிக்க விரும்பினால் அவரை கீப்பிங் செய்ய வைக்காமல் இருக்கலாம். அப்படியானால், இஷான் கிஷன் அணியில் இடம் பெற்றே ஆக வேண்டும். அப்போது வேறு பேட்ஸ்மேன் யாரையாவது அணியில் இருந்து நீக்க வேண்டும்.
நீக்க வேண்டும் : விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரில் ஒருவரை நீக்கினால் தான் கே எல் ராகுல் மற்றும் இஷான் கிஷன் இருவருக்கும் அணியில் இடம் கிடைக்கும்.
சிக்கலில் ரோஹித் சர்மா : அதே சமயம், கிஷனை அணியில் சேர்க்காமல் ராகுலை கீப்பிங் செய்ய வைத்தால் அவருக்கு மேலும் வலி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலைமையை கேப்டன் ரோஹித் சர்மா எப்படி சமாளிக்கப் போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ராகுலுக்கு இப்போது மீண்டும் காயமேற்பட்டால் அது உலகக்கோப்பை அணித் தேர்விலும் குழப்பத்தை ஏற்படுத்தும்.