கொழும்பு : 2023 உலகக்கோப்பை தொடர் நெருங்கி விட்டது. ஆனாலும், இந்திய அணியில் இன்னும் யார் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களாக காயம் காரணமாக அணியில் இடம் பெறாத கே எல் ராகுலை ஆசிய கோப்பை தொடரில் அணியில் சேர்க்க கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் டிராவிட் உத்தேசித்து உள்ளனர்.

ஆனால், இந்த முடிவை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அதிலும் கம்பீர் ஒருபடி மேலே போய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐந்தாம் இடம் : இந்திய அணியில் மிகவும் போராடித்தான் ராகுல் தனக்கான இடத்தை பிடித்தார். பல இடங்களில் பேட்டிங் செய்த அவர் ஐந்தாம் இடத்தில் சிறப்பாக பேட்டிங் செய்து தான் இடத்தை அணியில் உறுதி செய்து இருந்தார். கீப்பிங் செய்வதிலும் சிறந்து விளங்கினார்.
இஷான் கிஷன் வாய்ப்பு : ஆனால், அவருக்கு ஐபிஎல் தொடருக்கு பின் காயம் ஏற்பட்டது அணியில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டும் காயத்தில் சிக்கியதால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி வந்த இஷான் கிஷனுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்தது.
பாகிஸ்தான் போட்டி : இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் தடுமாறினாலும் பின் துவக்க வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகளில் தொடர்ந்து ஐம்பது ரன்களுக்கும் மேல் அடித்தார். அதைத் தொடர்ந்து ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தனக்கு ஒத்து வராத ஐந்தாம் இடத்தில் பேட்டிங் இறங்கி இக்கட்டான சமயத்தில் 82 ரன்கள் குவித்து அணியைக் காப்பாற்றினார்.
மீண்டும் ராகுல் : இந்த நிலையில், அவரை தொடர்ந்து அணியில் ஆட வைக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். ஆனால், கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் டிராவிட் திட்டமிட்டபடி கே எல் ராகுல் தற்போது போட்டிகளில் பங்கேற்க தயாராகி விட்டார். அதனால், இஷான் கிஷனை அணியில் இருந்து நீக்க வாய்ப்பு உள்ளது.
கம்பீர் எச்சரிக்கை : இது குறித்து பேசிய கவுதம் கம்பீர், "கே எல் ராகுலுக்கு பதில் இஷான் கிஷனை அணியில் ஆட வைக்கவில்லை என்றால் இந்திய அணி மிகப் பெரிய தவறை செய்து விடும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே போல, ஆகாஷ் சோப்ரா கூறுகையில் ஒருநாள் போட்டியின் தன்மையை இஷான் கிஷன் புரிந்து கொண்டு இருக்கிறார் எனவே அவரை நீக்கக் கூடாது என கூறி இருப்பதும் கவனிக்கத்தக்கது.