மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே ஓவரில் 31 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
இதன் மூலம் அவர் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார். எப்போதும் பவர்பிளேவில் பந்து வீசும் அர்ஜுன் டெண்டுல்கர் கடைசி கட்டத்தில் வீசியபோது இந்த நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று குஜராத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பந்து வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் பவர் பிளேவில் இரண்டு ஓவர்களை வீசி 9 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.இதுவும் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அர்ஜுன் ரெண்டு ஓவரை டெத் ஓவரில் வீச விடாமல் மும்பை இந்தியன்ஸ் அணி பாதுகாக்கிறதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி, அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு கூடுதல் பந்துவீச்சாளராக தான் அணியில் இருக்கிறார். சில சமயம் உங்களுக்கு மூன்றாவது ஓவர்களை வழங்க இயலாது. சிறந்த பந்துவீச்சாளர்களுக்கும் அனுபவ வீரர்களுக்குமே இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது.

சரி ஒரு ஓவர் கொடுத்து பார்ப்போமே என்று நினைத்து வழங்கினால் அது பெரும்பாலும் தவறாக முடிந்துவிடும். என்னை பொருத்தவரை அர்ஜுன் டெண்டுல்கர் அவருடைய பணியை சிறப்பாக செய்திருக்கிறார். அவர் ஒரு கூடுதல் பவுலர் தான். கூடுதல் பவுலர் எப்போதுமே நான்கு ஓவர்களை வீச முடியாது. பவர் பிளேவில் அர்ஜூன் டெண்டுல்கருக்கு இதுவரை நன்றாகவே செயல்பட்டு இருக்கிறார்.
அனுபவம் இல்லாத வீரராக இருக்கிறார். இதனால் கடைசி கட்டத்தில் அவரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருக்கலாம் என்று டாம் மூடி தெரிவித்துள்ளார். அர்ஜுன் டெண்டுல்கருக்கு அறிவுரை வழங்கியுள்ள பிரெட் லீ, விமர்சனங்களை அர்ஜுன் காதில் வாங்க வேண்டாம். இங்கு பந்து வீசுவது குறித்து பேசும் பலர் தங்கள் வாழ்க்கையில் பந்தை தொட்டு கூட பார்த்திருக்க மாட்டார்கள் .இதனை கண்டு கொள்ளாமல் பயிற்சியில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.