சென்னை : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்த உலகக் கோப்பை தொடரில் பல அணிகள் 350 ரன்கள் 400 ரன்கள் என அடிப்பதைப் பார்த்த ஆஸ்திரேலிய அணியும் சேப்பாக்கம் ஆடுகளத்தை தவறாக கணித்து 400 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என நினைத்து விட்டது.

தாங்கள் நினைத்தது தவறு என ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தின் 3வது ஓவரில் தெரிந்து கொண்டது. அதிரடி வீரர் மிச்சல் மார்ஸ் தேவை இல்லாமல் ஆப் சைடு சென்ற பந்தை தொட்டு விராட் கோலியின் அபார கேட்ச்சால் டக்அவுட் ஆகி வெளியேறினார். இதனை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு டேவிட் வார்னரும் ஸ்மித்தும் இணைந்து இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறினர்.
குறிப்பாக வெயிலும் சுட்டெரித்ததால் ஆஸ்திரேலிய அணிக்கு சென்னை நகரம், நரகம் போல் தெரிந்தது. எனினும் டேவிட் வார்னர் அதிரடியாக விளையாட முற்பட்டு குல்தீப் யாதவிடம் அவருடைய பந்துவீச்சில் கேட்ச் ஆனார். டேவிட் வார்னர் 41 ரன்களில் வெளியேற ஸ்மித் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜடேஜாவின் பந்துவீச்சில் 46 ரன்களில் போல்ட் ஆனார்.

இதேபோன்று மார்னஸ் லாபஸ்சேன் 27 ரன்களிலும் அலெக்ஸ் கேரி டக் அவுட் என ஜடேஜா ஒரே ஓவரில் ஆட்டம் இழந்தனர்.இதேபோன்று ஆஸ்திரேலியாவின் மானத்தைக் காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாட்டு மருமகன் மேக்ஸ்வெல் 15 ரன்களில் வெளியேறினார். இதேபோன்று மும்பை அணியின் ஐபிஎல் வீரர் கேமிரான் கிரீன் அஸ்வின் பந்துவீச்சில் 8 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

இதனால் ஆஸ்திரேலியா அணி 140 ரன்கள் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கேப்டன் பாட் கம்மின்ஸ் 15 ரன்கள், மிட்செல் ஸ்டார்க் 28 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலிய அணி அணி 49.3 ஓவர் முடிவில் 199 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. . இந்திய பந்துவீச்சு தரப்பில் ஜடேஜா மூன்று விக்கெட்டுகளும், பும்ரா,குல்தீப் தலா இரண்டு விக்கெட்டுகளும் அஸ்வின் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருக்கிறார்கள்.