டப்ளின்: அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் நீக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் டிஎல்எஸ் முறைப்படி வெற்றிபெற்றது. இந்திய அணியின் பேட்டிங்கின் போது 6.3 ஓவர்களில் 46 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த நடுவர்கள் மழை நிற்காததால், இந்திய அணி டிஎல்எஸ் முறைப்படி வெற்றிபெற்றதாக அறிவித்தனர்.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா, 11 மாதங்களுக்கு பின் வேற லெவல் கம்பேக் கொடுத்தார். முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய பும்ரா, முதல் போட்டியில் மட்டும் 16 டாட் பால்களை வீசி மிரட்டினார். அதேபோல் பிரசித் கிருஷ்ணாவில் ஓராண்டுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஆனால் 3வது வேகப்பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங், 3 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். ஆனால் அவர் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 22 ரன்கள் விளாசப்பட்டது. இன்னும் ஒரு ரன்கள் அதிகமாக விட்டுக் கொடுத்திருந்தால், இந்திய அணி தோல்வியை சந்தித்திருக்கும். இந்த ஒரு போட்டி மட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரிலும் அர்ஷ்தீப் சிங்கின் கடைசி ஓவர்கள் துவம்சம் செய்யப்பட்டன.
இதனால் அர்ஷ்தீப் சிங்கை நீக்கிவிட்டு, ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடிய ஆவேஷ் கானை அணியில் சேர்க்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆசியப் போட்டிகளுக்கான அணியில் உள்ள ஆவேஷ் கானுக்கு அயர்லாந்து தொடர் நல்ல பயிற்சியாகவும் அமையும் என்று பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியின் ஆல் ரவுண்டர் சிவம் துபேவுக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதேபோல் அயர்லாந்து அணியை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றவும் இந்திய அணி மும்முரமாக உள்ளது.