சிட்னி: பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் லாகூரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஒரு வேடிக்கையான சம்பவம் அரங்கேறியுள்ளது. போட்டியின் போது டிஆர்எஸ் முடிவை அறிவிப்பதில் மூன்றாவது நடுவர் செய்த தொடர் தவறுகள் வர்ணனையாளர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா வீசிய 14வது ஓவரில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் களத்தில் இருந்தார். ஜம்பா வீசிய பந்தை பாபர் அசாம் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் ஆட முயன்றார். ஆனால் பந்து மட்டையில் படாமல் காலில் பட்டது. ஆஸ்திரேலிய வீரர்கள் எல்பிடபிள்யூ (LBW) கேட்டபோது கள நடுவர் அவுட் தர மறுத்துவிட்டார். இதனையடுத்து ஆஸ்திரேலியா டிஆர்எஸ் முறையீடு செய்தது.

இதனை ஆய்வு செய்த மூன்றாவது நடுவர் நசீர் ஹுசைன் செய்த குளறுபடிகள் தான் தற்போது வைரலாகி வருகிறது. பந்து டிராக்கிங் தொழில்நுட்பத்தில் பந்து ஆஃப் ஸ்டம்ப் திசையில் பிட்ச் ஆனது தெளிவாகத் தெரிந்தது. பாபர் அசாம் ஒரு வலது கை பேட்ஸ்மேன். ஆனால், அவர் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட நின்றதால், அவர் இடது கை பேட்ஸ்மேன் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ, நடுவர் நசீர் ஹுசைன் "பந்து லெக் ஸ்டம்ப் திசையில் பிட்ச் ஆகிறது" என்று தவறாகக் கூறினார்.
உடனே அங்கிருந்த தொழில்நுட்பக் குழுவினர் அவருக்குச் சுட்டிக்காட்டினர். தனது தவறை உணர்ந்த அவர், மீண்டும் பந்து வீச்சை சரிபார்க்கச் சொன்னார். பந்து விக்கெட்டில் படுவது திரையில் தெளிவாகத் தெரிந்தது. ஆனாலும் குழப்பத்தில் இருந்த அவர், கள நடுவரிடம் "உங்கள் முடிவில் உறுதியாக இருங்கள் (அவுட் இல்லை)" என்று முதலில் கூறினார்.
அந்தக் கணமே சுதாரித்துக்கொண்டு, "இல்லை இல்லை.. அது அவுட்.. உங்கள் முடிவை மாற்றுங்கள்" என்று கூறினார். அடுத்தடுத்து நடுவர் மாற்றிக் மாற்றிக் பேசியதால், களத்தில் இருந்த நடுவர் அஹ்சன் ரசாவும் என்ன சிக்னல் கொடுப்பது என்று தெரியாமல் சிறிது நேரம் திகைத்து நின்றார்.
ஒரு சர்வதேச போட்டியில் பாபர் அசாம் போன்ற முன்னணி வீரருக்கே இந்த நிலைமையா என்று வர்ணனையாளர்கள் நேரலையிலேயே சிரிக்கத் தொடங்கினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் கேலிக்குள்ளாகி வருகிறது.
இறுதியில் பாபர் அசாம் 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின், சைம் அயூப் மற்றும் கேப்டன் சல்மான் அலி ஆகா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த தொடரில் மீதம் உள்ள அடுத்த இரண்டு போட்டிகளிலும் வென்றால் மட்டுமே ஆஸ்திரேலிய அணியால் இந்த டி20 தொடரை கைப்பற்ற முடியும் என்ற நிலை உள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக டிராவிஸ் ஹெட் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.