வந்தது சூப்பர் அப்டேட்.. ஐபிஎல்-ஐ மீண்டும் நடத்த 2 வியூகம்.. பிசிசிஐ செயல் அதிகாரி சொன்ன தகவல்!
மும்பை: ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்த பிசிசிஐ-ன் தலைமை செயல் அதிகாரியும், ஐபிஎல்-ன் செயல் அதிகாரியுமான ஹேமாங் அமின் 2 திட்டங்களை வகுத்துள்ளார்.
இந்தியாவில் மிகவும் பாதுகாப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர், கொரோனா பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்.9ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 29ம் லீக் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 31 போட்டிகள் தடைபட்டுள்ளன.

பெரும் நஷ்டம்
கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. ஏனென்றால் மீதமுள்ள போட்டிகளை நடத்தாவிட்டால் பிசிசிஐக்கு சுமார் ரூ.2,500 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது. இந்திய அணிக்கு செப்.14ம் தேதி வரை டெஸ்ட் தொடர் உள்ளது. அதே போல் அக்டோபர் மாதத்தில் டி20 உலகக்கோப்பை தொடங்கிவிடும். எனவே டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக செப்டம்பரிலேயே ஐபிஎல் தொடரை நடத்தி முடித்துவிட வேண்டும் என திட்டமிடப்பட்டு வருகிறது.

2 வாய்ப்புகள்
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால் அயல்நாட்டில் மீதமுள்ள போட்டிகளை நடத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, இலங்கை கிரிக்கெட் வாரியங்கள் ஐபிஎல் தொடரை நடத்த விருப்பம் தெரிவித்திருந்தனர். இதன் இறுதி முடிவை எடுக்க வேண்டிய சூழலில் பிசிசிஐ உள்ளது.

ஹேமாங் திட்டம்
இந்நிலையில் பிசிசிஐ-ன் தலைமை செயல் அதிகாரி ஹேமாங் அமின் ஐபிஎல் தொடரை நடத்துவதற்காக 2 திட்டங்களை வகுத்துள்ளார். அதில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து சரியாக இருக்காது என்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தினால் சிறப்பாக இருக்கும் எனக்கூறியுள்ளார்.

முதல் வாய்ப்பு
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் செப்.14ம் தேதி முடிவடைகிறது. இதன் பின்னர் செப்டம்பர் பாதியில் இருந்து அக்டோபர் மாதம் பாதி வரை இங்கிலாந்தில் நடத்தலாம். ஆனால் ரிஸ்கான ஒன்று. ஏனென்றால் செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்தில் கோடைக்காலம் மறைந்து மழைக்காலம் தொடங்க அதிக வாய்ப்புள்ளது. எனவே மழையால் அங்கு மீண்டும் போட்டிகள் தடைபட வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல்-ஐ நடத்துவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு 'பவுண்ட்களில்' அதிகளவு செலவழிக்க வேண்டும்.

2வது வாய்ப்பு
ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் வெயிலாக இருக்கும். அங்கு அந்த மாதத்தின் கடைசியில் வெயில் குறைந்து நல்ல சூழல் நிலவும். அதே போல ஏற்கனவே 2020ம் ஆண்டு ஐபிஎல் தொடரை அமீரகத்தில் நடத்திய அனுபவம் உள்ளது. அங்கு செலவுகள் குறைவு. அந்நாட்டு அரசு மீண்டும் ஐபிஎல் தொடரை அங்கு நடத்திக்கொள்ள அனுமதி கொடுக்கிறது. எனவே அமீரகம் தான் சரியான தேர்வாக இருக்கும் எனக்கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications