கொழும்பு: உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்பதை பரிசீலனை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை தொடரை வென்று 8வது முறையாக சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்றிரவே இந்திய அணி வீரர்கள் அனைவரும் மும்பை திரும்பினர். இதற்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் அடுத்த 4 நாட்களில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கவுள்ளது. செப்.22ஆம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு முதல் போட்டி மொஹாலியிலும், 2வது ஒருநாள் போட்டி செப்.24ஆம் தேதி இந்தூரிலும், 3வது ஒருநாள் போட்டி செப்.27ஆம் தேதி ராஜ்கோட்டிலும் நடக்கவுள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி இன்று இரவு அறிவிக்கப்படவுள்ளது. உலகக்கோப்பை தொடருக்கு முன் நடக்கவுள்ளதால், இந்தத் தொடரில் இந்திய அணியின் செயல்பாடு கவனிக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அணிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் வாசிம் அக்ரம் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் உலகக்கோப்பை தொடர் மிக நீண்ட தொடராக உள்ளது. ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு மாநிலத்திற்கு பயணிக்க வேண்டியுள்ளது. அதற்கு முன் இந்திய வீரர்களை சோர்வடைய வைக்கும் நடவடிக்கையில் பிசிசிஐ ஈடுபட வேண்டாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரிலும் இந்திய அணி 3 மாநிலங்களுக்கு பயணிக்க வேண்டும்.
அதுவும் ஒருநாள் இடைவெளியில் பயணிப்பது வீரர்களை எளிதாக சோர்வடைய வைக்கும். ஒருவேளை உலகக்கோப்பை தொடருக்கு சில வீரர்களை தயாராக வைக்க வேண்டிய நோக்கம் இருந்தால், அவர்களை கொண்டு ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் விளையாடலாம் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் காயமடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு ஒருநாள் தொடரில் இந்திய அணி வீரர்கள் காயமடைய வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.