
இங்கிலாந்து தொடர்
வரும் ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து புறப்படும் இந்திய அணி அங்கு வரும் ஜூன் 18ம் தேதி முதல் நடைபெறும் நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுகிறது. அதன்பிறகு ஆக.4ம் தேதி முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இங்கிலாந்தில் பேச்சுவார்த்தை
ஐபிஎல் தொடரானது டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக செப்டம்பர் மாதத்தில் நடத்துவதே பிசிசிஐக்கு உள்ள ஒரே வாய்ப்பு. ஆனால் செப்டம்பர் மாதம் 14ம் தேதி வரை இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்திலேயே மீதமுள்ள ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இங்கிலாந்து டெஸ்ட் தொடரையும் மாற்றி அமைக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

டெஸ்ட் தொடர் ரத்து?
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் செப்டம்பர் 14ம் தேதியன்று தான் முடிகிறது. இதற்கும் டி20 உலகக்கோப்பைக்கும் உள்ள கால இடைவெளி வெறும் 2 வாரங்கள் தான். ஆனால் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த 2 வாரங்கள் போதாது. இதன் காரணமாகவே இங்கிலாந்து தொடரை மாற்றி அமைக்க பிசிசிஐ பேசி வருகிறது.

நிர்பந்தத்தில் இங்கிலாந்து
பிசிசிஐ-ன் கோரிக்கையை ஏற்க வேண்டிய சூழலில்தான் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உள்ளது. ஏனென்றால் கொரோனா காரணமாக அந்நாட்டு கிரிக்கெட்டில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க வேண்டும் என்றால் ஐபிஎல் போன்ற மிகப்பெரும் தொடர்களை இங்கிலாந்தில் நடத்துவது சிறந்த முடிவு. இதன் காரணமாக தான் ஏற்கனவே இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரை நடத்த விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











