மும்பை: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட வேண்டும் என்று பிசிசிஐ அவரிடம் சமாதானம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை சந்தித்தது. சொந்த மண்ணில் அடைந்த தோல்வி காரணமாக இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் சோகத்தில் உள்ளனர். கனவை பறிகொடுத்ததால், அவர்களின் அடுத்தக்கட்ட கிரிக்கெட் நகர்வு எப்படி இருக்கும் என்று ரசிகர்களால் கூட கணிக்க முடியவில்லை.

அதுமட்டுமல்லாமல் ரோகித் சர்மா 36 வயதை எட்டிவிட்டதால், விரைவில் ஓய்வை அறிவிக்கவும் வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனிடையே தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடரில் விராட் கோலி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட விருப்பமில்லை என்று கூறியுள்ளதாகவும், டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தேர்வு செய்யுமாறு கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். இதனால் இந்திய அணியின் கேப்டனாக யாரை நியமிப்பது என்று புரியாமல் பிசிசிஐ திணறி வருகிறது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் காரணமாக இன்று ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பதவிக்காலம் நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு வெளி வந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட ரோகித் சர்மாவிடம் பிசிசிஐ பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின் உடனடியாக டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் தொடங்கவுள்ளது. அதற்குள் இந்திய அணியை சரியான வீரர்களை கொண்டு கட்டமைக்க வேண்டிய நிலை இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பின் ரோகித் சர்மா, சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.