
தொடர் விமர்சனங்கள்
கொல்கத்தா அணி வீரர் வருண் சக்கரவர்த்தி அணியின் பபுளில் இருந்து வெளியேறிவிட்டு மீண்டும் குவாரண்டை செய்யாமல் அணியுடன் இணைந்தார். இதனால் அணிகளில் பயோ பபுள்கள் உடைந்ததே கொரோனா தொற்று பரவ காரணம் என விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளது.

கங்குலி விளக்கம்
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி, எனக்கு ஒன்றும் பபுள் விதிமுறைகள் மீறப்பட்டதாக தெரியவில்லை. பிசிசிஐக்கு கிடைத்திருக்கும் அறிக்கைகளும் அப்படிதான் கூறுகிறது. நாட்டில் கொரோனா அதிகரித்தது எப்படி என கூறுவது கடினம். அது போல தான் ஐபிஎல் தொடரிலும் கொரோனா அதிகரித்தது எப்படி எனக்கூறுவது மிகவும் கடினமான ஒன்று.

தொற்று பரவலுக்கு காரணம்
ஐபிஎல் தொடர் ஒரே ஒரு நகரத்தில் நடத்தியிருக்கலாம் என தற்போது கூறுவது சுலபம். ஆனால் நாங்கள் இந்தியாவில் நடத்த திட்டமிட்டபோது மிகவும் குறைவான பாதிப்புகளே இருந்தது. இங்கிலாந்து தொடரை கூட வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். இத்தனைக்கும் மேலாக முதல் சில ஆட்டங்கள் கொரோனா அதிகம் உள்ள மும்பையில் தான் நடந்தது. ஆனால் அங்கு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது திடீரென அதிகரித்துள்ளது துரதிஷ்டவசமானது.

வீரர்களின் உடல்நிலை
கொரோனா பாதிக்கப்பட்ட வீரர்கள் நலமுடன் உள்ளனர். அவர்கள் சிறந்த முறையில் குணப்படுத்தப்பட்டு சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள், நாளை மாலத்தீவு பயணிக்கின்றனர். அங்கிருந்து அவர்கள் பாதுகாப்பாக வீடுகளுக்கு செல்வார்கள். அதில் எந்த குழப்பமும் இல்லை எனதெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications