மும்பை: இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ராவின் காயம் முழுமையாக குணமடைந்துவிட்டாரா என்பது தெரியாது என்று கேப்டன் ரோகித் சர்மா கூறிய அதே நாளில், பும்ராவின் கம்பேக் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதில் அளித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக ஓய்வில் இருக்கிறார். கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடினார். அதன் பின் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர், 6 மாதமாக ஓய்வில் இருந்தார்.

தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் பும்ரா, ஒரே நாளில் 9 ஓவர்கள் வரை வீசி வருகிறார். அதுமட்டுமல்லாமல் பும்ரா முழுமையான உடல் தகுதியை பெறுவதற்காக என்சிஏ சார்பாக சில பயிற்சி போட்டிகளையும் ஏற்பாடு செய்துள்ளது. அந்தப் போட்டிகளிலும் பும்ரா பங்கேற்று விளையாடி வருகிறார்.
இதனால் அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பும்ரா பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சீனியர் வீரர்கள் பங்கேற்காத நிலையில், காயத்தில் இருந்து கம்பேக் கொடுக்க உள்ள வீரர்களையும் இளம் வீரர்களோடு சேர்த்து அனுப்ப பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழு இணைந்து திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் பும்ரா கம்பேக் எப்போது இருக்கும் என்ற கேள்விக்கு கேப்டன் ரோகித் சர்மா பதில் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர், ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியின் விலை மதிக்க முடியாத வீரர். அவரின் அனுபவமும், திறமையும் இந்திய அணிக்கு மிகவும் முக்கியம். அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவாரா என்பது தெரியவில்லை. ஆனால் என்சிஏ உடன் தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறோம். ழு உடற்தகுதியை எட்டிய பின் இந்திய அணிக்கு திரும்புவார் என்று கூறினார்.
இந்த நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பும்ரா கம்பேக் குறித்து அப்டேட் தெரிவித்துள்ளார். அதில், நட்சத்திர பவுலர் முழு உடல் தகுதியை எட்டிவிட்டார். அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு தேர்வு செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளார். இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கூட பும்ராவின் காயம் பற்றி முழுமையாக தெரியாத நிலையில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதே நாளில் பும்ராவின் உடல்தகுதி பற்றி பேசி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.