“2027 உலகக்கோப்பை அணியில் இவர் நிச்சயம் ஆடணும்.. பும்ராவுக்கு இணையாக..” .. உத்தப்பா வேண்டுகோள்
மும்பை: தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில், சீனியர் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஜஸ்பிரித் பும்ராவுக்கு சரியான இணையாக அவர் இருப்பார் என்றும் உத்தப்பா கூறி இருக்கிறார்.
கடந்த 2022 டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு புவனேஸ்வர் குமாருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 36 வயதான நிலையில் அவர் தனது பந்துவீச்சு முறையை மாற்றி தற்போதைய அதிரடி கிரிக்கெட்டிற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். குறிப்பாக, ஐபிஎல் தொடரில் பெங்களூரு (ஆர்சிபி) அணி தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன் பட்டம் வெல்வதற்கு புவனேஸ்வர் குமார் முக்கிய பங்காற்றினார். 2026 ஐபிஎல் சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய அவர் 7.95 எகானமியுடன் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதற்கு முந்தைய 2025 சீசனிலும் 14 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள ராபின் உத்தப்பா, "2027 உலகக்கோப்பை அணியில் புவனேஸ்வர் குமார் நிச்சயமாக இடம் பெற வேண்டும். 2020 முதல் 2022 வரையிலான சுமாரான சீசன்களுக்குப் பிறகு அவர் ஓரங்கட்டப்பட்டார். ஆனால், கடுமையான உழைப்பின் மூலம் தான் இன்னும் சிறந்த ஃபார்மில் இருப்பதை அவர் நிரூபித்துள்ளார். ஆர்சிபி அணியின் தொடர் வெற்றிகளே இதற்கு சாட்சி ஆகும்" என்றார்.
“நான் 14,000 ரன்கள் குவித்ததற்கு ஒரு காரணம் இருக்கு”.. விமர்சகர்களுக்கு ஜோ ரூட் நெத்தியடி பதில்!
மேலும் அவர் பேசுகையில், "தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் புதிய பந்தில் ஸ்விங் செய்யக்கூடிய புவனேஸ்வர் குமார் பும்ராவுக்கு மிகச்சிறந்த இணையாக செயல்பட்டு எதிரணிக்கு அழுத்தம் தருவார். ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு இதுவே கடைசி உலகக்கோப்பையாக இருக்க வாய்ப்புள்ளது என்பதால், இவர்களின் அனுபவமும் கோப்பையை வெல்லும் வெறியும் இந்திய அணிக்குக் கூடுதல் பலம் சேர்க்கும்" என்று ராபின் உத்தப்பா உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
