கிங்ஸ்டன்:விஷம் வைத்து, கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பாப் உல்மரின் உடலை அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மார்ச் 18ம் தேதி மர்மமான முறையில் இறந்தார் பாப் உல்மர். அவர் அதிக மது அருந்தி இறந்திருக்கலாம் என முதலில் கருதப்பட்டது. ஆனால் அவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.
பிறகு அதிலும் குழப்பம் எழுந்தது. முதலில் விஷம் கொடுத்தும் பின்னர் கழுத்தை நெரித்தும் பாப் கொல்லப்பட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு பாம்பு விஷம் கொடுக்கப்பட்டதாக கடைசியாக வெளியான தகவல்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் பாப் உல்மரின் உடலை அவரது சொந்த ஊரான தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகருக்குக் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜமைக்கா தேசிய பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பாப் உல்மரின் உடலை அவரது நாட்டுக்கு அனுப்பி இறுதிச் சடங்குகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில், காவல்துறை இணை ஆணையர் மார்க் ஷீல்ட்ஸ் ஈடுபடுவார். முடிந்த வரை பாப் உல்மரின் உடல் விரைவாக அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் உல்மரின் உடல் எப்போது தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பது குறித்துத் தெரிவிக்கப்படவில்லை.